ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா' கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்!
ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செயலால் ஆட்டோமொபைல் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் கார் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் சரியாகிவிடும், இல்லை பண்டிகை காலத்தில் சரியாகிவிடும் என்று காத்திருந்த வாகன உற்பத்தி நிறுவனங்களின் நம்பிக்கை பொய்த்து வருகிறது.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறையும், புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக, கார் உற்பத்தி ஆலை யார்டுகளிலும், டீலர்களிலும் தொடர்ந்து வாகனங்கள் தேக்கமடைந்து வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு சில மேலோட்டமான சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார். ஆனால், அதனால் எதிர்பார்த்த அளவுக்கு வாகனத் துறை எழுச்சி பெறவில்லை. தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே செல்கிறது.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதுதான் ஒரே வழியாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், நேற்று கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், கார், பைக்குகளின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

எனினும், கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறைக்கு சற்று பயன் கிடைக்கும். இதனை வைத்து கார், பைக் நிறுவனங்கள் சமாளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வாகனத் துறையை தூக்கி நிறுத்துவதற்கு, ஜிஎஸ்டி வரியை குறைப்பதே ஒரே வழியாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








