ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன? ஷாக் அடிக்க வைக்கும் தகவல்கள்...
ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலையே இல்லை என முன்வைக்கப்பட்டுள்ள கருத்து விவாதங்களை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கார், டூவீலர் என்று அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் சமீப காலமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. வாகனங்களின் விற்பனை சரிவு காரணமாக, பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்பத்தி குறைத்துள்ளன.

இதனால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டுள்ளன. அத்துடன் ஏராளமான டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆட்டோமொபைல் துறையின் இந்த கடுமையான வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இதில், பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை முக்கியமானவை. இதுதவிர பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளும் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அன்று முதல் இந்தியாவில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். தற்போது இந்தியாவில் பெரும்பாலும் பிஎஸ்-4 விதிகளுக்கு இணையான வாகனங்கள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதை மக்கள் தள்ளிப்போட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை காரணமாக புதிய வாகனங்களை வாங்குவதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருவதாகவும், இதுவும் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இதுதவிர ஓலா, உபர் போன்ற கேப் நிறுவனங்களாலும், புதிய வாகனங்களை வாங்குவதை மக்கள் தவிர்க்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

இதுபோல் ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க தேவையான சில முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவை போதுமானதாக இல்லை என ஆட்டோமொபைல் துறையினர் கூறி வருகின்றனர். வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்பட மேலும் சில சலுகைகளை மத்திய அரசிடம் இருந்து ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்து கொண்டுள்ளது.

இந்த சூழலில், உள்நாட்டு ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலையே இல்லை என சிஏஐடி எனப்படும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT - Confederation of All India Traders) தெரிவித்துள்ளது. அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவதற்காகதான் அவர்கள் அழுது கொண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளரான பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், ''உள்நாட்டு ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை இல்லை. அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவதற்காகதான் அவர்கள் இதனை கூறி வருகின்றனர்'' என்றார். பிரவீன் கண்டேல்வாலின் இந்த கருத்து விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

முன்னதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதை தள்ளிப்போடும் நோக்கத்தில்தான், விற்பனை சரிவு என்ற ஆயுதத்தை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சமூக வலை தளங்களில் உலா வரும் ஒரு பதிவின் சுருக்கம் பின்வருமாறு: இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில்தான் பிஎஸ்-6 விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால் தற்போதுள்ள பிஎஸ்-4 இன்ஜின்களை, பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மாற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிய முதலீட்டை செய்தாக வேண்டும்.

எனவேதான் மந்தநிலை எனக்கூறி பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதை ஒத்திப்போட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இப்படியான ஒரு புகார் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில்தான், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு விவாதத்திற்கு உரிய கருத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பஜாஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜீவ் பஜாஜ் தெரிவித்த ஒரு கருத்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆட்டோமொபைல் துறையின் தடுமாற்றத்திற்கு, உற்பத்தியை அதிகமாக செய்து தேக்கி வைத்ததே முக்கியமான காரணம் என ராஜீவ் பஜாஜ் கூறியிருந்தார். இதில், பொருளாதார மந்தநிலையின் பங்கு சிறியதுதான் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் பஜாஜ் தெரிவித்த இந்த கருத்துக்களும் பரபரப்பை உண்டாக்கின. எனவே தற்போது நிலவி வரும் விற்பனை சரிவு பிரச்னைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களேதான் காரணமா? என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








