அப்ப்ப்ப்ப்பாடா... ஒரு வழியாக நிம்மதி பெரு மூச்சு விட்ட மாருதி சுஸுகி... ஏன் தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனம் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஒரு வழியாக நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று மாருதி சுஸுகி. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தடுமாறி வந்தது. எனினும் கடந்த அக்டோபர் மாதத்தில் அந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை சற்று அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை காலமே இதற்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய 'ரிலீஃப்' என இதனை கூறலாம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 1,38,100 யூனிட்களில் இருந்து 1,41,550 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது 2.5 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தந்திராஸ் தினத்தன்று ஒரே நாளில் 45,000 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் கண்டுள்ள வளர்ச்சிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு விற்பனையை போலவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த 2018 அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 8,666 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இது தற்போது 9,158 கார்களாக உயர்ந்துள்ளது. எனவே ஏற்றுமதி என்ற வகையில் பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் 5.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,46,766 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,53,435ஆக அதிகரித்துள்ளது.

இனி செக்மெண்ட் வாரியாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை நிலவரத்தை பார்க்கலாம். மினி கார் செக்மெண்ட் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் வீழ்ச்சியை பதிவு செய்வது தொடர்கிறது. ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் பழைய வேகன்ஆர் உள்ளிட்ட கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மினி செக்மெண்ட்டின் அடங்குகின்றன.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் 32,835 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28,537 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்தால் இந்த செக்மெண்ட்டில் விற்பனை செய்ய முடிந்துள்ளது. எஸ்-பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டபோதிலும் இந்த செக்மெண்ட் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே நேரத்தில் காம்பேக்ட் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் 15.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. புதிய வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ, டிசையர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கியதாக காம்பேக்ட் செக்மெண்ட் உள்ளது. இந்த செக்மெண்ட்டில் 75,094 கார்களை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 64,789ஆக மட்டுமே இருந்தது. அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரே மிட்-சைஸ் செடனான சியாஸின் விற்பனை குறைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3,892 சியாஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் தற்போது 2,371 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

அதே நேரத்தில் ஜிப்ஸி, எர்டிகா, எக்ஸ்எல்6, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் ஆகிய கார்களை உள்ளடக்கிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் யுடிலிட்டி வெய்கில் செக்மெண்ட் 11.3 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாருதி சுஸுகி இந்த செக்மெண்ட்டில் 23,108 கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களை டொயோட்டா நிறுவனத்திற்கு விற்பனை செய்வதை தனியாக 'Sales to other OEM' என குறிப்பிடுகிறது. அந்த வகையில் பார்த்தால் அதன் மொத்த உள்நாட்டு விற்பனையில் இன்னும் கூடுதலாக 2,727 க்ளான்சா கார்கள் சேர்கின்றன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தினுடைய உள்நாட்டு விற்பனையை 1,44,277ஆக உயர்த்துகிறது.

7 மாதங்களில் முதல் முறையாக வளர்ச்சி கண்டிருப்பதால் மாருதி சுஸுகி நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது. ஆனால் இது பண்டிகை காலத்தின் எதிரொலியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சி நீடிக்குமா? அல்லது மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு செல்லுமா? என்பதை உறுதியாக கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








