குறைவான கட்டணத்தில் செல்ஃப் டிரைவிங் வாடகை கார் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஓலா!
சொந்தமாக காரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் செல்ஃப் டிரைவிங் வாடகை டாக்சி திட்டத்தை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

ஆன்லைன் மூலமாக வாடகை கார் சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனம் வர்த்தக விரிவாக்கத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற சேவையை தவிர்த்து, நீண்ட தூர பயணங்களுக்கான வாடகை கார் சேவையை அறிமுகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வாடிக்கையாளர்கள் காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளது. ஓலா டிரைவ் என்ற பெயரில் இந்த புதிய வாடகை கார் திட்டத்தை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

முதல்கட்டமாக பெங்களூர் நகரில் இந்த புதிய செல்ஃப் டிரைவிங் திட்டத்தை கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பிற நகரங்களிலும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போது செல்ஃப் டிரைவிங் வாடகை கார் நிறுவனங்கள் வழங்கி வரும் சேவையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் கீழ் ஓலா டிரைவ் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும், எவ்வளவு மணிநேரம் தேவைப்படும், எரிபொருள் அளவு உள்ளிட்டவற்றை கொடுத்து அதன் அடிப்படையில் புக்கிங் செய்து கொள்ளலாம்.

இதன்மூலமாக, பிற செல்ஃப் டிரைவிங் கார் சேவை நிறுவனங்களைவிட ஓலா டிரைவ் மூலமாக காரை வாடகைக்கு எடுக்கும்போது 30 சதவீதம் கட்டணம் குறைவாக இருக்கும். இதனால், ஓலா டிரைவ் திட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டுக்குள் 20,000 கார்களை இந்த திட்டத்தின் கீழ் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்களில் ஓலா நிறுவனத்தின் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்.

இதன்மூலமாக, பல்வேறு தகவல்களையும், பொழுதுபோக்கு வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்காக 24 மணிநேர உதவி மையமும் செயல்படும். அவசரகால பட்டன், சாலை அவசர உதவி மற்றும் வாகனத்தின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வசதிகளுடன் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








