இந்த 7 நிறுவனங்களின் மின் வாகனங்களுக்கு மட்டுமே அரசின் மானியம் கிடைக்கும்... சிறப்பு தகவல்...!
மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் பெறும் வாகனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த நிறுவனம் மானியம் பெற தகுதியானவை என்ற தகவலை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

இந்தியாவில் எரிபொருள் வாகனங்களுக்கு எதிரான புரட்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்தவகையில், மின் வாகன பயன்பாட்டை நாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் அண்மைக் காலங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு, அரசின் லட்சிய திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மின் வாகன மயமாக்கலுக்கு, உற்பத்தி நிறுவனங்கள் சரிவர இசைந்து கொடுப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதனை உறுதி செய்யும் வகையில், ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் பெறும், எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

மின்வாகனங்களுக்கு மானியம் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கும் விதமாக, மத்திய அரசு ஃபம் என்ற திட்டத்தை உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. இதன் முதல்கட்ட திட்டம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி இரண்டாம் கட்ட ஃபேம்-2 திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பெரும் தொகையானது, நாட்டில் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு ஒதுக்கப்பட்டது. இது அறிமுகமாகி முழுமையாக மூன்று மாதங்கள் கடந்து விட்டநிலையில், பல நிறுவனங்கள் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் சலுகை பெறுவது கடினமாகியுள்ளது.

முன்னதாக, நடைமுறையில் இருந்த ஃபேம்-1 திட்டத்தில் சிறப்பு சலுகைப் பெற்ற நிறுவனங்கள்கூட தற்போது, ஃபேம்-2 திட்டத்தின்கீழ் சலுகைப் பெறுவது கடினமாகியுள்ளது. ஆகையால், தற்போது வெறும் 7 நிறுவனங்களின், எலக்ட்ரிக் தயாரிப்புகள் மட்டும் சிறப்பு சலுகையைப் பெறுவதற்கு தகுதியானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முன்னதாக 29-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற்று வந்தன.

அதேசமயம், தற்போது மானியம் பெற தகுதியானவை என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்தும் நிறுவனங்களும், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பு நிறுவனங்களாக மட்டுமே இருக்கின்றன. இதில், பாஸஞ்சர் போக்குவரத்திற்கு பயன்படும் பஸ் போன்ற வாகனங்களைத் தாயரிக்கும் ஒரு நிறுவனம்கூட ஃபேம்-2 திட்டத்திற்கு தகுதி பெறவில்லை.

மத்திய மற்றும் மாநில அரசுகள், நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் வாகனங்களில் பெரும்பாலானவற்றை மின்வாகனங்களாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதில், முக்கியமாக பொது பயன்பாட்டிற்காக உபயோகிக்கப்பட்டு வரும், பேருந்துகளே முக்கிய இடத்தில் இருக்கின்றன.

அண்மையில், கேரள முதலைமச்சர் பினராயி விஜயன், வருகின்ற 2022ம் ஆண்டிற்குள் 3 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ், 2 லட்சம் மின்சார ஸ்கூட்டர், 50 ஆயிரம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் மற்றும் 1,000 எலெக்ட்ரிக் டிரக்குகள் உள்ளிட்டவற்றை பயன்பாட்டில் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்தார். இதுபோன்ற முயற்சியை கேரளா மட்டுமின்றி கர்நாடகா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மற்ற மாநிலங்களும் மேற்கொண்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், ஃபேம்-2 திட்டத்தில் பாஸஞ்சர் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்றுகூட மானியம் பெற தகுதியானவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் அமைந்துள்ளது.
ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் பெறும் நிறுவனங்களாக, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், கைனடிக் க்ரீன் எனர்ஜி மற்றும் பவர், ஜிதேந்திர நியூ இவி டெக், ஒகினவா ஆட்டோடெக், ஏத்தர் எனர்ஜி மற்றும் ஆம்பியர் வாகனங்கள் உள்ளிட்டவையே இருக்கின்றன.

ஃபேம்-2 திட்டமானது, பொது போக்குவரத்து துறை மற்றும் வாடகை வாகனங்கள் உள்ளிட்டவற்றை மின் மயமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின்மூலம், தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் பெற முடியாது. அதேசமயம், இது ஒரு மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 5 லட்சம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள், 55 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 ஆயிரம் இ-பஸ்கள் உள்ளிட்டவற்றிற்கு பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








