பெட்ரோல், டீசல் கார்களுக்கு முழுக்கு... நிதின் கட்காரி எடுத்த அதிரடி முடிவு!
பெட்ரோல், டீசல் கார்களை வழக்கொழிக்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தீவிரமாக இறங்கி உள்ளார். அவரது அதிரடி திட்டங்கள் ஆட்டோமொபைல் துறையை புதிய தளத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்து வரும் நிதின் கட்காரி பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆட்சிக் காலத்திலேயே பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாக, அதே துறைக்கு மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், வாகனப் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டு வரும் சீர்கேட்டை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். வரும் 2023ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 150 சிசி திறனுக்கும் குறைவான இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

வரும் 2023ம் ஆண்டு முதல் பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்ய வழி வகுக்கவும் திட்டமிடப்பட்டது. வரும் 2025ம் ஆண்டு முதல் அனைத்து சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிப்பதற்கான திட்டமும் கையில் எடுக்கப்பட்டது.

ஆனால், இது மிக குறுகிய காலம் என்று கூறி, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனையடுத்து, அந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில், வரும் 2030ம் ஆண்டு முதல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியாக இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை வெகுவாக குறைக்க வாய்ப்பு ஏற்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த ஒரு வாரத்திற்குள் நடத்துவதற்கும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாதகங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

இதுதவிர்த்து, மின் நெடுஞ்சாலைகளை அமைக்கவும், 50 ஜிகாவாட் ஹவர் பேட்டரிகளை தயாரிப்பதற்கான திட்டமும் மத்திய அரசு வசம் உள்ளது. இந்த அனைத்து விஷயங்கள் குறித்து மிக விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: TOI


Click it and Unblock the Notifications








