அடுத்த அதிர்ச்சி... மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியுமா?
மார்க்கெட் மந்த நிலை காரணமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் தற்காலிக பணியாளர்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாகன மார்க்கெட்டில் தற்போது கடுமையான மந்த நிலை நிலவி வருகிறது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை சார்ந்து செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வாகன விற்பனை சரிவடைந்து கொண்டே வருவதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளன. வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை வாகன நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இதன் காரணமாக தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இயங்கி வந்த ஏராளமான டீலர்ஷிப்களும் வரிசையாக இழுத்து மூடப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆட்டோமொபைல் துறை எத்தனை வகையான பிரிவினருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

சேல்ஸ், சர்வீஸ், இன்சூரன்ஸ், லைசென்ஸிங், ஃபைனான்ஸிங், ஆக்ஸஸரிஸ், டிரைவர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என பல தரப்பினருக்கும் ஆட்டோமொபைல் துறை வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால் ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய மிக கடுமையான சரிவு காரணமாக இவர்களில் ஏராளமானோர் வேலையிழந்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மார்க்கெட் மந்த நிலை காரணமாக வேலை இழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயர் அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்தத்தை மாருதி சுஸுகி நிறுவனம் புதுப்பிக்கவில்லை. நிரந்தர பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கையை மாருதி சுஸுகி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சி.பார்கவா கூறுகையில், ''வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இது. டிமாண்ட் அதிகரிக்கும் பட்சத்தில், அதிகப்படியான காண்ட்ராக்ட் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதேபோல் டிமாண்ட் குறைந்தால், அவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ''2021ம் நிதியாண்டில் மார்க்கெட் வலுவாக மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது பிஎஸ்-6க்கு மாறுவது நிறைவடைந்திருக்கும்'' என்றார். இந்தியாவில் பிஎஸ்-6 விதிகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் டீலர்ஷிப்களில் கடந்த 3 மாத கால அளவில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக சமீபத்தில் அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து வெளியாகி வரும் வேலையிழப்பு தொடர்பான செய்திகள் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

அதே நேரத்தில் ஆட்டோமொபைல் துறை உடனடியாக வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வரும் ஜிஎஸ்டி குறைப்பு போன்ற முக்கியமான கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே வீழ்ச்சி தொடர்ந்தால், வேலையிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








