டிரான்ஸ்பார்மர் மீது மோதி கோர விபத்தில் சிக்கிய கார்.. உள்ளே இருந்தவர்களுக்கு என்ன ஆனது என தெரியுமா?
டாடா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களில் ஒன்றான ஹெக்ஸா கார், டிரான்ஸ்பார்மர் மீது மோதி கோர விபத்தில் சிக்கியது.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில் பாதுகாப்பிற்கு பஞ்சமிருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. டாடா நெக்ஸான் (Tata Nexon) இதற்கு மிகச்சிறந்த உதாரணம். குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் கார் டாடா நெக்ஸான்தான்.

நெக்ஸான் தவிர டாடா நிறுவனத்தின் ஹெக்ஸா காரும் (Tata Hexa) கூட பாதுகாப்பு அம்சங்களில் தலை சிறந்து விளங்குகிறது. இது 7-சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். மிகவும் உறுதியான எஸ்யூவி ரக கார் என்பதை டாடா ஹெக்ஸா அடிக்கடி நிரூபித்து வருகிறது. கொடூரமான விபத்துக்களின்போது கூட, பயணிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்பை ஹெக்ஸா வழங்குகிறது.

சிறப்பான கட்டுமான தரம் (Build Quality) மற்றும் பயணிகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச பாதுகாப்பு ஆகிய காரணங்களால், டாடா ஹெக்ஸா நம்மை அடிக்கடி ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் டாடா ஹெக்ஸா கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று மீண்டும் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிவமோகா அருகே உள்ள கும்ஷி என்ற கிராமத்தில், டாடா ஹெக்ஸா கார் ஒன்று சமீபத்தில் கோர விபத்தில் சிக்கியது. வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. ஆனால் காரில் பயணம் செய்த யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தன்னையும், தனது குடும்பத்தினரையும் காப்பாற்றிய டாடா ஹெக்ஸா காரின் கட்டுமான தரத்தை அதன் உரிமையாளர் வெகுவாக பாராட்டியுள்ளார். முன்னதாக விபத்து நடைபெற்ற உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து உதவி செய்தனர். அவர்களால் கதவை எளிதாக திறந்து, உள்ளே சிக்கி கொண்டிருந்தவர்களை உடனே மீட்க முடிந்தது எனவும் விபத்தில் சிக்கிய டாடா ஹெக்ஸா காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விபத்து குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கையில், இது டாடா ஹெக்ஸா காரின் பேஸ் வேரியண்ட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும், காரின் முன்பகுதி நொறுங்கி விட்டது. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டாடா ஹெக்ஸா அப்டேட் செய்யப்பட்டது. புதிய இன்போடெயின்மெண்ட் யூனிட் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட கலர் ஆப்ஷன்கள் ஆகியவற்றுடன் 2019 டாடா ஹெக்ஸா கார் கிடைக்கிறது. ஹெக்ஸா காரில் வழங்கப்பட்டுள்ள புதிய 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயிண்மென்ட் சிஸ்டமானது, ஆன்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும். அனைத்து வேரியண்ட்களிலும் இது ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

முன்னதாக டாடா ஹெக்ஸா காரில், 2.2 லிட்டர், வேரிகோர் 320 டீசல் இன்ஜினுடன் கூடிய எக்ஸ்இ (XE) என்ற பேஸ் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. ஆனால் டாடா ஹெக்ஸா காரின் என்ட்ரி-லெவல் எக்ஸ்இ வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது டாடா ஹெக்ஸா கார் தற்போது அதிக சக்தி வாய்ந்த வேரிகோர் 400 இன்ஜினுடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 156 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கிடைக்கின்றன. டாப் எண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில், 4 வீல் டிரைவ் (4WD) ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








