ஒப்புக்கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி... இந்த அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது? என்ன தெரியுமா?
ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை நிலவி கொண்டிருப்பதை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

முன்னணி நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை இலக்கத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை இவ்வாறு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருவது இதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமும், பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே ஆட்டோமொபைல் துறையை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கான சில முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார்.

ஆனால் ஆட்டோமொபைல் துறையினரின் மிக முக்கியமான கோரிக்கையான ஜிஎஸ்டி குறைப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அரசு இதனை பரிசீலனை செய்யும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (செப்டம்பர் 5) உறுதியளித்துள்ளார். இது ஆட்டோமொபைல் நிறுவனங்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையை நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார்.

அத்துடன் ஆட்டோமொபைல் துறையில் தற்போது மந்த நிலை நிலவி வருவதையும் நிதின் கட்கரி ஒப்பு கொண்டார். எனவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் கூறினார். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் பட்சத்தில், வாகனங்களின் விலை குறையும்.

இதன் காரணமாக அவற்றின் விற்பனை அதிகரிக்கும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நடப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இது தொடர்பான அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இது தொடர்பான முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்து கால தாமதம் செய்யாமல் அறிவிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதன் மூலம் பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு சரிவில் இருந்து மீண்டு வர முடியும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றொரு முக்கியமான தகவலையும் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. எனவே மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்களை போலவே ஹைப்ரிட் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியையும் 5 சதவீதமாக குறைக்க அரசு பரிசீலனை செய்யும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








