5ஜி இன்டர்நெட் இணைப்பு வசதியுடன் டயர்: பைரெல்லி நிறுவனம் அசத்தல்!
5ஜி இன்டர்நெட் இணைப்பு வசதியுடன் கூடிய அடுத்த தலைமுறைக்கான டயர் மாடலை பைரெல்லி உருவாக்கியுள்ளது. இந்த அசத்தலான டயர் மூலமாக கார் உரிமையாளர்கள் பெற இருக்கும் பயன்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த இன்டர்நெட் யுகத்தில் வீட்டிலுள்ள கம்ப்யூட்டர், டிவி, சிசிடிவி கேமரா மட்டுமல்ல, வீட்டின் பூட்டுக்கும் இன்டர்நெட் இணைப்பு வசதியுடன் வந்துவிட்டது. இதனை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது. தற்போது கார்களில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கும் நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு வந்துவிட்டது.

இதனால், இருந்த இடத்திலிருந்தே தங்களது அனைத்து உடமைகளையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். இன்டர்நெட் தொழில்நுட்பம் பல பரிமாணங்களை அடைந்து வரும் இவ்வேளையில், சாலையில் செல்லும் கார்களுக்கு இடையே பாதுகாப்பை அதிகரிக்கும் விதத்தில், சென்சார் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தின் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் செல்வதற்கான வாய்ப்புகளை கார் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

இதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முனைந்துள்ளது உலகின் மிகவும் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனமான பைரெல்லி. ஆம். அதாவது 5ஜி இன்டர்நெட் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் விசேஷ வசதியுடன் புதிய டயரை உருவாக்கி இருக்கிறது.

இந்த டயருக்கு பைரெல்லி 'சைபர் டயர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆடி, எரிக்சன், கேடிஎச், இட்டால்டிசைன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த புதிய சைபர் டயரை பைரெல்லி உருவாக்கி இருக்கிறது.

இந்த டயரின் சிறப்பம்சங்கள் தொடர்பாக விளக்க படம் ஒன்றையும் அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. வழியில் இருக்கும் மோசமான சாலைகள், சாலையில் மழை நீர் தேங்கி அபாயம் இருப்பதை உணர்த்தும் எச்சரிக்கை, சாலையில் முன்னால், பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் சமிக்ஞைகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல பணிகளை இந்த டயர் வழங்கும்.

சாலையில் முன்னால் இருக்கும் பிரச்னைகள், தடைகள் உள்ளிட்ட அபாயங்களை முன்கூட்டியே ஓட்டுபவருக்கு எச்சரிக்கை வழங்கும். இதற்காக, காருக்குள் விசேஷ தொடர்பு சாதனம் ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, எச்சரிக்கைளை வழங்கும்.

இதுதவிர்த்து, கார் பயணித்துள்ள தூரம், பாரத்தின் அளவு சரியாக இருக்கிறதா, சாலைக்கும், டயருக்குமான தரைப்பிடிப்பு போதுமானதாக இருக்கிறதா மற்றும் சாலையின் தரைப்பரப்பு எவ்வாறு உள்ளது என்று பல்வேறு தகவல்களையும் இந்த டயர் ஓட்டுனருக்கு வழங்கும். 5ஜி இன்டர்நெட் மூலமாக இந்த தகவல்கள் காருக்குள் இருக்கும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். குறித்த நேரத்தில் எச்சரிக்கைகளையம் வழங்கும்.

சாலையின் நிலைக்கு ஏற்ப டிரைவிங் மோடுகளை மாற்றிக் கொள்வதற்கு இது உதவும். அத்துடன், அந்த சாலையை பயன்படுத்தும் பிற கார் ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கும் சாலையின் நிலை குறித்து தகவல்களை பகிர்ந்து கொள்ளும். இதன்மூலமாக, மோசமான சாலைகளை கண்டறிந்து, அதனை பிற வாகன ஓட்டிகள் தவிர்த்து, மாற்று சாலையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

சாலையில் அதிக மழைநீர் தேங்கி இருந்தால், அதனை கண்டறிந்து பின்னால் வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் 5ஜி சைபர் டயர்களுக்கு தகவல் தெரிவிக்கும். இதன்மூலமாக, பின்னால் வரும் வாகன ஓட்டி அந்த இடத்தில் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக கடப்பதற்கு உதவி புரியும். அதாவது, டயரில் உள்ள சென்சார்கள் மற்றும் இன்டர்நெட் சாதனங்கள் மூலமாக இதே வகையிலான பிற டயர்களுடன் தொடர்பு கொள்ளும்.


Click it and Unblock the Notifications








