இ-சைக்கிளை அடுத்து மின்சார கார் உற்பத்தியில் போலாரிட்டி: சிறப்பு தகவல் கசிவு!
போலாரிட்டி நிறுவனம், இ-சைக்கிள்களைத் தொடர்ந்து மின்சார கார்களையும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்காலத்தில் இந்திய சாலைகளை எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்களே அதிகம் ஆளும் என்கின்ற தகவல் துளியளவும் சந்தேகமின்றி தற்போதே தெரிகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. அண்மையில்கூட தமிழக அரசு மின் வாகனங்கள் பயன்பாடு மற்றும் அவற்றின் உற்பத்தியை மாநிலத்தில் ஊக்குவிக்கும் வகையில் பலே திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு முன்பாக மத்திய அரசும் அதன் பங்காக நாடு முழுவதும் மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தது. அந்தவகையில், மானியம், ஜிஎஸ்டி வரி குறைப்பு, பதிவு கட்டணம் குறைவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அது அறிவித்தது.

நடப்பாண்டு தொடங்கியது முதல் இந்திய எரிபொருள் வாகனச் சந்தை கடும் விற்பனைச் சரிவைச் சந்தித்து வருகின்றது. இந்த சரிவிற்கு, மின் வாகனங்களுக்கு வழங்கப்படும் இத்தகைய சலுகைகளும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.
அதற்கேற்ப வகையில் மின் வாகனங்களின் விற்பனையை மட்டுமே ஊக்குவிக்கின்ற வகையில் பல அதிரடி சிறப்பு சலுகைகள் மத்திய அரசு அறிவித்து வருகின்றது.

ஆகையால், இந்தியாவின் தேவையை உணர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள், நாட்டில் மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்பைக் காட்டி வருகின்றன. அதேசமயம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையாக இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அதன் மின் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் போலாரிட்டி மின் வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் எலெக்ட்ரிக் இ-சைக்கிள்களை கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.
ஒட்டுமொத்தமாக இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரையும் கவரும் வகையில், ஆறு மாடல் இ-சைக்கிள்களை அது அறிமுகம் செய்தது. அவை, ஒவ்வொன்றும் அதன் தரத்திற்கேற்ப விலையைப் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், ஆரம்பநிலை இ-சைக்கிள்களுக்கு ரூ. 38 ஆயிரம் என்ற விலையும், உயர் ரக இ-சைக்கிளுக்கு ரூ. 1.05 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
இந்த மின்சார வாகனங்களின் அறிமுகத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அரவிந்த சவாந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "அரசு மின்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின் விளைவை தவிர்க்கும் விதமாக இதனை அரசு கையாண்டு வருகின்றது. எனவே, அரசு மேற்கொண்டு வரும் பிரத்யேக நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் 130 சதவீதம் மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய போலாரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் சச்சின் ஜாதவ், "போலாரிட்டி இ-சைக்கிள்களுக்கான புக்கிங் தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்கு திரும்பி அளிக்கும் வகையில் ரூ. 1,001 என்ற தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. புக்கிங் செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு 2020ம் ஆண்டின் முதல் கால் பகுதியில் இ-சைக்கிள்கள் டெலிவரி செய்யப்பட உள்ளன" என்றார்.

மேலும் பேசிய அவர், "கூடுதலாக 36 வேரியண்டுகளில் இ-சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதையடுத்து மின்சார கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக" தெரிவித்தார்.
இவற்றை அடுத்த வருடத்திற்குள் போலாரிட்டி நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், தற்போது இதற்கான வேலையில் மிக தீவிரமா அந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்தின் இயக்குநரான சச்சின் ஜாதவ், ஏற்கனவே சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இவர் தலைமையில் இயங்கிவரும் போலாரிட்டி நிறுவனம் தயாரிக்க உள்ள மின்சார காருக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதேபோன்று, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆறு இ-சைக்கிள்களும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், அனைவருக்கும் போலாரிட்டி இ-சைக்கிளை விற்பனைச் செய்யும் வகையில், ஆண்டு ஒன்றிற்கு 15 ஆயிரம் இ-சைக்கிள்களை தயாரிக்க போலாரிட்டி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்காக புதிய தயாரிப்பு தளத்தை சக்கன் மாவட்டத்தில் தயார் செய்து வருகின்றது. ஆனால், இந்நிறுவனம் தற்போது பயன்படுத்தி வரும் ஹிஞ்ஜன்வாடி தொழிற்சாலை போதுமான தயாரிப்பு கொள்ளளவைக் கொண்டிராத காரணத்தால் இத்தகைய நடவடிக்கையில் போலாரிட்டி நிறுவனம் களமிறங்கியுள்ளது. இங்குதான் புதிய கார் உற்பத்தி நடைபெறும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








