நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளுக்கு திரைப்பட டிக்கெட் வழங்கிய கமிஷனர்... எதற்கு தெரியுமா...?
போலீஸ் கமிஷனர் நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளுக்கு திரைப்படத்திற்கான டிக்கெட் வழங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாக போலீஸார் அண்மைக் காலங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கேற்ப வகையில், மத்திய அரசும் அதன் பங்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்டங்களை அறங்கேற்றி வருகின்றது. அந்தவகையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம், முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை பல மடங்கு அதிகரித்து வசூலிக்க உதவும்.
அதேசமயம், தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், புதிய வாகனங்களின் பதிவு மற்றும் பழைய வாகனங்களின் மறுபதிவு உள்ளிட்டவற்றிற்கு பெறப்படும் ஆர்டிஓ கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் இனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை எஃப்சி சான்றிதழ் பெற வேண்டும் என்ற புதிய திட்டத்தையும் மத்திய அரசு அமலுக்கு கொண்டுவர திட்டம் தீட்டி வருகின்றது.

இவ்வாறு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து வருகின்றது.
அதேசமயம், நாட்டில் உள்ள மாநில போக்குவரத்துத்துறை போலீஸாரும், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை, சமீபகாலமாக இரும்பு கரங்கள் கொண்டு அடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் போக்குவரத்துத்துறை போலீஸார் ஓர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக போக்குவரத்து போலீஸார், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதிலிருந்து முற்றிலும் மாறுபடும் விதமாக ஹைதராபாத் போலீஸார், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளை சிறப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இதேபோன்றதொரு முயற்சியில் புனே நகர போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகிய ஆன்லைன் உணவு டெலிவரியில் 50 சதவீத டிஸ்கவுண்ட்டிற்கான கூப்பனை வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது ஹைதராபாத் போலீஸாரும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இவர்கள் உணவு கூப்பன்களுக்கு பதிலாக சினிமா படத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்த புகைப்படத்தை ஃபில்டர் காஃபி என்ற டுவிட்டர் பயன்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, புனே நகர போலீஸார் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டபோது, நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு, இந்த நடவடிக்கையை மற்ற நகர போலீஸார்களும் கடைபிடிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹைதராபாத் நகர போலீஸாரும் களமிறங்கியுள்ளனர்.

அவ்வாறு, நாடு முழுவதும் போலீஸார், வாகன முறைகேட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும்நிலையில், தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஹைதராபாத் கமிஷனர் அஞ்ஜானி குமார், திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த சில வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என பாராபட்சம் பாராமல் அனைத்து வாகன ஓட்டிகளையும் மடக்கி ஆவணங்களை சரிபார்த்தார்.

ஆய்வின்போது, இ-செலாண் அபராத நிலுவை மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்டவற்றில் ஈடுபடாத வாகன ஓட்டிகளை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு புதிய படத்திற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. இதுபோன்று, ஒட்டுமொத்தமாக, 45 வாகன ஓட்டிகளுக்கு திரைப்படத்திற்கான டிக்கெட் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் தனியார் திரையரங்கம் பிவிஆர் நிர்வாகத்தின்மூலம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர்களாக தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகர போலீஸார் மாறி வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும், சினிமா திரைப்படங்களில் வருவதைப்போன்று அதிரடியானதாக இருக்கின்றது.

அந்தவகையில், பலவிதமான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கூட, சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ வைத்து, முறைகேட்டில் ஈடுபட்ட பல வாகன ஓட்டிகள்மீது சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதேபோன்று, தவறான பாதையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதத்திற்கு பதிலாக இரண்டு நாள் சிறைத் தண்டனையை வாங்கி கொடுத்தனர். இவ்வாறு, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக போலீஸார் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருவது, அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற்றுவந்த விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

அதேசமயம், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தண்டிக்கும் போலீஸார், அனைத்து விதிகளையும் முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளை சிறப்பித்துள்ள இந்நிகழ்வு பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இதுபோன்ற நடவடிக்கையில், இனிவரும் காலங்களில் மற்ற முக்கிய நகரங்களின் போலீஸார் கடைபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








