சொகுசு காருக்கு வரி கட்டுவதை தவிர்க்க இந்த அரசியல்வாதி செய்த காரியத்தை பார்த்தீங்களா?
மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காருக்கான வரி கட்டுவதை தவிர்க்கும் விதத்தில், நூதன மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூர், யஷ்வந்த்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் வந்த இரண்டு சொகுசு கார்களின் பதிவு எண்களும் ஒரே மாதிரி இருந்துள்ளது. மேலும், இரண்டும் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் என்பதும் தெரிய வந்தது. இதனை ஆர்டிஓ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, இதுதொடர்பாக, போலீசார் உதவியுடன் விசாரணையில் இறங்கினர்.

இதில், ஒரு காரின் நம்பர் பிளேட் உண்மையானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அதே எண்ணில் வலம் வந்த மற்றொரு சொகுசு காரை வலைவீசி தேடியுள்ளனர்.

சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் அந்த காரை பெங்களூர் போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில், அந்த கார் பெங்களூர் கெங்கேரி பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கெங்கேரியிலுள்ள மைலசந்திரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த சொகுசு கார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.இதையடுத்து, காலை 5 மணியளவில் அந்த கார் நிற்கும் வீட்டிற்கு சென்ற போலீசார், அந்த சொகுசு காரை பறிமுதல் செய்ததுடன், காரின் உரிமையாளரான ராஜூ கவுடா என்பவரையும் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் வைத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் போலி நம்பர் பிளேட் இருப்பது உறுதியானது. மேலும், ராஜு கவுடா மண்டியாவை அடுத்த கெரகோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

இவர் மண்டியா அருகே கல் குவாரிகளை நடத்தி வருவதுடன் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கெங்கேரியிலும் வீடு உள்ளது. இதையடுத்து, அவரை விசாரணைக்காக, போலீசாரும், வட்டாரப் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளும் யஷ்வந்த்பூர் ஆர்டிஓ அலுவலத்திற்கு அழைத்து வந்தனர்.

அந்த சொகுசு கார் வாங்கி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல், தற்காலிக பதிவு எண்ணுடன் ஓடியதும் தெரிய வந்துள்ளது. அவர் வைத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காருக்கு சாலை வரி, மூன்று ஆண்டுகளுக்கான அபராதம் எல்லாம் சேர்த்து, ரூ.22 லட்சம் சாலை வரி கட்ட வேண்டியிருந்தது.

இதனை தவிர்ப்பதற்காக, அவர் இவ்வாறு போலி பதிவு எண்ணை பயன்படுத்தி தனது மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், யஷ்வந்த்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், ராஜூ கவுடா அந்த அலுவலகத்திலிருந்து சுவர் ஏறி குதித்து தப்பிவிட்டார். இதையடுத்து, அவரை பிடிப்பதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சொகுசு கார்களுக்கு பல லட்சம் ரூபாய் சாலை வரியாக விதிக்கப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. கடந்த ஆண்டு நடிகை அமலாபால் இதேபோன்று தனது மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காருக்கு வரி கட்டுவதை தவிர்க்க மோசடி செய்ததாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source: Bangalore Mirror


Click it and Unblock the Notifications








