போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரின் இந்திய அறிமுக விபரம்!
போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு மெல்ல அதிகரித்து வருகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததே சாட்சியாக அமைந்துள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து, பிற கார் நிறுவனங்களும் தங்களது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு நம்பிக்கை பெற்றுள்ளனர்.

அதன்படி, மிக விரைவில் எம்ஜி நிறுவனத்தின் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, மாருதி நிறுவனமும் தனது வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், போர்ஷே சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது. புதிய மசான் எஸ்யூவி கார் அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய போர்ஷே சிஇஓ ஆலிவர் புளூம், உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் டைகன் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எப்படியும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும், " என்று தெரிவித்தார்.

போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் மாதம் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில்தான் அறிமுகம் செய்யபட இருப்பதுடன், டிசம்பரில் டெலிவிரி பணிகள் துவங்கும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு போர்ஷே திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

போர்ஷே டைகன் எலெட்ரிக் காரில் இரண்டு சக்திவாய்ந்த மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 600 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 12 வினாடிகளுக்குள்ளும் எட்டிவிடும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காரில் பயன்படுத்தப்படும் திறன் வாய்ந்த பேட்டரியானது 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

போர்ஷே 911 கார் போன்ற ஓட்டுதல் தரத்தை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கை 8 நிமிடங்களுக்குள் கடந்து சாதனை படைப்பதற்கான புதிய முயற்சியையும் மேற்கொள்ள போர்ஷே திட்டமிட்டுள்ளது.

இந்த கார் வரும் 2020ம் ஆண்டு இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா மாடல் எஸ் காருக்கு இது போட்டியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்ரன.


Click it and Unblock the Notifications








