இந்தியாவில் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை களமிறக்குகிறது சிட்ரோன்!
இந்தியாவில் சிட்ரோன் கார் பிராண்டை பிஎஸ்ஏ குழுமம் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் செய்தது. அத்துடன், இந்தியாவிற்கான முதல் கார் மாடல் விபரத்தையும், தனது வர்த்தக திட்டங்களையும் வெளியிட்டது. எமது செய்தியாளர் ஸ்டீபன் நீல் தரும் தகவல்களையும், படங்களையும் பார்க்கலாம்.

இன்றைய நிகழ்ச்சியில் பிஎஸ்ஏ குழுமத்தின் அதிகாரிகள் பலரும் பங்கேற்று இந்தியாவிற்கான சிட்ரோன் நிறுவனத்தின் வர்த்தக திட்டங்கள் குறித்து செய்தியாளர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவில் முதலாவது கார் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்தியாவிற்கு உலகளாவிய தரத்திலான நவீன மாடலை வழங்கும் எண்ணத்துடன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை முதலில் களமிறக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புதிய சிட்ரோன் சிச5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வலிமையான டிசைன், சொகுசு அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை இந்தியர்களை வெகுவாக கவரும் என்று நம்புவதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கூறி இருக்கின்றனர்.

புதிய சிட்ரோன் எஸ்யூவியில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ எஞ்சின் 130 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும்.

டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 130 எச்பி பவரையும் மற்றொரு 2.0 லிட்டர் எஞ்சின் 180 எச்பி பவரை அளிக்க வல்லதாகவும் இருக்கும். மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிட்ரோன் கார்களுக்கு 95 சதவீதம் அளவுக்கான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெறுவதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியர்களுக்கான இந்திய தயாரிப்பாக சிட்ரோன் கார்கள் இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக தெரிவித்துள்ளது பிஎஸ்ஏ குழுமம்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் கார்கள் உள்நாட்டு நிபுணர் குழுவின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி மாற்றங்கள் செய்து அறிமுகம் செய்யப்படும் அல்லது உருவாக்ககப்படும் என்று பிஎஸ்ஏ குழுமம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு புதிய காரை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 2 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெற்று விடும் வகையில், வர்த்தக திட்டத்தை வகுத்து இருப்பதாக பிஎஸ்ஏ குழுமம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள சிகே பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் சிட்ரோன் கார்கள் உற்பத்தி செய்யப்படும். இங்குதான் மிட்சுபிஷி கார்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிட்ரோன் கார்களுக்கான எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

அம்பாசடர் பிராண்டின் மறுபிறப்பு!
ஹிந்துஸ்தான் அம்பாசடர் பிராண்டை பிஎஸ்ஏ குழுமம் ரூ.80 கோடி மதிப்பில் கைப்பற்றியது தெரிந்ததே. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அம்பாசடர் பிராண்டில் மின்சார கார்களை அறிமுகம் செய்ய பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுளளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்கள் வினவினர்.

அம்பாசடர் பிராண்டை இப்போதைக்கு பயன்படுத்தும் எண்ணம் இல்லை. ஆனால், பயன்படுத்தும்போது நிச்சயம் அதன் பாரம்பரியத்தை போற்றும் விதத்திலும், மதிப்பூட்டும் விதத்திலும் கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று பிஎஸ்ஏ குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சார கார் அறிமுகம் குறித்து திட்டங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து இந்த ஆண்டு இறுதியில் பரிசீலிப்போம் என்று பிஎஸ்ஏ குழும அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக மின்சார கார்களை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என்றும் பிஎஸ்ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








