பிவி சிந்துவுக்கு பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசு... வழங்கிய பிரபலங்கள் யார் தெரியுமா...?
உலக சாம்பியன் பிவி சிந்துவுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை வழங்கிய பிரபலங்கள் யார் என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றாக புதிய எக்ஸ்5 மாடல் இருக்கின்றது. இது பல்வேறு சொகுசு அம்சங்களை அடக்கியிருப்பதால் திரையுலகம் மட்டுமின்றி முன்னணி தொழிலதிபர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கின்றது.

இந்த காரை பிரபல தெலுங்கு திரையுலக நட்சத்திர நடிகர் நாகர்ஜுனா, விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த வாரம் நடைபெற்ற உலக ஏஸ் பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கலந்துக் கொண்ட பி.வி. சிந்து, அதில் வெற்றிப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால், அனைத்து நாளிதழ்களின் தலைப்பு செய்திகளிலும் அவர் இடம்பெற்றார்.

இது இந்திய வரலாற்றில் முக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது. இத்தகைய வெற்றியை சர்வதேச அளவில் பெறும் வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்தியன் பேட்மிண்டன் லீக் உரிமையாளரும், மும்பை மாஸ்டர்ஸின் இணை உரிமையாளருமான வி. சாமுண்டேஸ்வர்நாத், ஆடம்பரமான சொகுசு கார்களை பரிசு அளிப்பது வழக்கம்.

அந்தவகையில், ஏஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கபதக்கத்தை வென்ற பி.வி. சிந்துவை கவுரவிக்கும் விதமாக பிஎம்டபிள்யூ காரை பரிசாக அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வானது, ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரையுலக நட்சத்திரம் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக நாகார்ஜுனா கலந்துக் கொண்டார். மேலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் சாவியை பி.வி. சிந்துவிடம் வழங்கினார்.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய நகார்ஜுனா, தான் பிவி சிந்துவின் ரசிகர் என்று கூறினார்.
மேலும், பி.வி. சிந்து ஏஸ் பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியதை நான் அமெரிக்காவில் நேரில் சென்று பார்வையிட்டேன். அவர் விளையாடிய விதம் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. ஆகையால், இந்த பரிசை அவருக்கு நான் வழங்குவதில் பெருமடைகின்றேன்" என்று கூறினார்.

இதுபோன்று, விளையாட்டு வீரர்களுக்கு சாமுண்டேஸ்வர் ஆடம்பர சொகுசு கார்களை வழங்குவது 22வது முறையாகும். இதில், பி.வி. சிந்து மட்டுமே நான்கு கார்களைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இது சிந்து புரிந்த சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

இம்முறை அவர் பெற்றிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ரக கார் பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இந்த மாடல் இரு விதமான வேரியண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதனை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், எக்ஸ்டிரைவ்30டி ஸ்போர்ட் மற்றும் எக்ஸ்டிரைவ்30டி எக்ஸ்லைன் ஆகிய இரு வேரியண்டில் கிடைக்கின்றது. இவை, 72.9 லட்சத்தில் இருந்து 80 லட்சம் ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகின்றது.

இந்த கார் தற்போது நான்காம் தலைமுறை தரத்தில் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதுதான், இந்தியாவில் விற்பனையாகும் மிகப் பெரிய அளவு கொண்ட எஸ்யூவி ரக பிஎம்டபிள்யூ காராகும். இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புறத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
அந்தவகையில், நட்சத்திர உணவு விடுதிகளில் இடம்பெறுவதைப் போன்று பல்வேறு வசதிகள் இதில் காணப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் 3.0 லிட்டர் டர்போ சார்ஜட் டீசல் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் காணப்படுகின்றது. மேலும், இந்த கார் வெறும் 6.5 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தைத் தொட்டுவிடும் திறனைப் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








