மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...
மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய காருக்கு ரெனால்ட் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள விற்பனை இலக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கார் மார்க்கெட்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே தென் கொரியாவை சேர்ந்த கியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டை நோக்கி வரிசையாக படையெடுத்து வருகின்றன.

அதே சமயம் ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் கால் பதித்து விட்ட பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இங்கு எதிர் நீச்சல் அடித்து வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் முன்னணி மாடலான க்விட், கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தை பெரிதும் தாங்கி பிடித்த மாடலாக க்விட் பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீப காலமாக க்விட் காரின் விற்பனையும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. எனவே புதிய மாடல்களை அறிமுகம் செய்வது மற்றும் தற்போது உள்ள மாடல்களை அப்டேட் செய்வது ஆகியவற்றின் மூலம் கார் விற்பனையை அதிகரிக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ட்ரைபர் என்ற 7 சீட்டர் எம்பிவி ரக காரை ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விரைவில் களமிறக்கவுள்ளது.

ஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு இந்த காரின் ட்ரைபர் என்ற அதிகாரப்பூர்வ பெயர் கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அறிவிக்கப்பட்டது. ரெனால்ட் ட்ரைபர் 7 சீட்டர் எம்பிவி வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி உருவாக்கப்படுகிறது.

முன்னதாக எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றையும், எல்பிஏ என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் சப் காம்பேக்ட் செடான் ரக கார் ஒன்றையும் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு கார்களிலும் கூட இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரானது, ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலைகளில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓரளவிற்கு குறைவான விலை என்பதால், மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காருக்கு, ரெனால்ட் ட்ரைபர் கடும் போட்டியை வழங்கும். க்விட் காரின், 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படவுள்ளது. என்றாலும் க்விட் காரில் இருப்பதை காட்டிலும், அதிக பவரை வெளிப்படுத்தும் வகையில், இந்த இன்ஜின் அப்டேட் செய்யப்படவுள்ளது.

அதே சமயம் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இதுதவிர டிரைவர் ஏர் பேக், இபிடி உடனான ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் வார்னிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ட்ரைபர் எம்பிவி காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் கூடிய டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் மல்டி பங்ஷனல் ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழலில் ஆரம்பத்தில் ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரைபர் எம்பிவி கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய ரெனால்ட் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில், ஓரளவிற்கு குறைந்த விலையில் வருவதால், இந்த இலக்கு எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








