ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் போட்டி...
சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை ரெனால்ட் நிறுவனம் களமிறக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நிலைத்து நிற்க பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2019 மற்றும் 2020 ஆகிய 2 ஆண்டுகளில் நான்கு புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக வரும் 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வருடாந்திர விற்பனை எண்ணிக்கையை தற்போது இருப்பதை காட்டிலும் இரண்டு மடங்காக உயர்த்த ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ள 4 கார்களில், 3 மாடல்கள் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ரெனால்ட் ட்ரைபர் 7 சீட்டர் எம்பிவி, க்விட் ஹேட்ச்பேக் ரக காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் டஸ்டர் எஸ்யூவி ரக காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகியவைதான் அந்த 3 கார்கள்.

இவை தவிர நான்காவதாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஒன்றையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ள முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இதுதான். இது தற்போது எச்பிசி (HBC) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. க்விட் மற்றும் ட்ரைபர் கார்களை போன்று இதுவும் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெனால்ட் நிறுவனத்தின் இந்தியா லைன் அப்பில், விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள ட்ரைபர் மற்றும் டஸ்டர் ஆகிய கார்களுக்கு இடையே எச்பிசி நிலை நிறுத்தப்படவுள்ளது. அனேகமாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் எச்பிசி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அதே ஆண்டில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் ரெனால்ட் எச்பிசி சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் ஆனவுடன் ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களுடன் ரெனால்ட் எச்பிசி போட்டியிடவுள்ளது.

கார் உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிகவும் லாபகரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 இதற்கு ஓர் உதாரணம்.

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஹூண்டாய் வெனியூ மற்றொரு உதாரணம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி வரும் மே மாதம் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் ரெனால்ட் நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் தனது முதல் காரை அறிமுகம் செய்யவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

எச்பிசி காரில் பெட்ரோல் இன்ஜினை வழங்குவதில்தான் ரெனால்ட் நிறுவனம் அதிக கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. அதற்காக டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் ஒரே அடியாக மறுத்து விட முடியாது. போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையிலான அதிநவீன வசதிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Note: Images used are for representational purpose only


Click it and Unblock the Notifications








