மாருதியை தொடர்ந்து இந்தியாவில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் ரெனோ!
கடுமையான மாசு உமிழ்வு விதிகளை மனதில் வைத்து, டீசல் கார் விற்பனையை இந்தியாவில் நிறத்துவதற்கு ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு இணையான தரத்தில் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்தும் பணிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும், டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, ரெனோ கார் நிறுவனமும் டீசல் கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று டெல்லியில் நடந்த புதிய ட்ரைபர் எம்பிவி கார் அறிமுக நிகழ்ச்சியின்போது இந்த தகவலை ரெனோ நிறுவனத்தின் சிஇஓ தியரி போலோர் தெரிவித்தார்.

இந்தியாவில் எமது டீசல் கார்களுக்கான வரவேற்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் டீசல் கார்களுக்கான மவுசு வெகுவாக சரிந்து வருகிறது. எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எங்களது உற்பத்தி பிரிவுகளில் பெட்ரோல், டீசல் என இரு கார்களையும் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு வசதி உள்ளது. எனவே, பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்த முடியும். இதற்காக, சிறிய அளவிலான மாறுதல்கள் செய்ய வேண்டும். முதலீடும் மிக குறைவாகத்தான் இருக்கும்.

கடந்த காலத்தில் இந்திய வர்த்தகத்தில் சில தவறுகளை செய்துவிட்டோம். இந்தியாவில் நாங்கள் போதுமான முதலீடுகளை செய்து வருவதால், கூடிய விரைவில் இந்தியாவின் மூன்றாவது கார் நிறுவனமாக வளர்ச்சி பெறுவோம் என்று கூறி இருக்கிறார்.

ரெனோ நிறுவனத்தின் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமானது. நம்பகத்தன்மையையும் பெற்றிருக்கிறது. ரெனோ டஸ்ட்டர், லாட்ஜி, நிஸான் டெரானோ உள்ளிட்ட பல மாடல்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், இந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கான வரவேற்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த எஞ்சினை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்பதுடன், கார் விலையை கணிசமாக உயர்த்த வேண்டி இருக்கும். எனவே, மார்க்கெட்டில் எடுபடாமல் போனால் பெரிய அளவிலான நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், இந்த முடிவை ரெனோ எடுத்துள்ளது.

எனினும், புதிய பெட்ரோல் கார்களை வைத்து தனது வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வரும் 2022ம் ஆண்டில் தங்களது விற்பனை இரட்டிப்பாகும் என்று ரெனோ கணக்கு போட்டுள்ளது.

மேலும், புதிய ட்ரைபர் கார் மீது அதிக நம்பிக்கையை ரெனோ கார் நிறுவனம் வைத்துள்ளது. இது அதிக இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் கார் போல பயன்படுத்த முடியும் என்பதுடன், விலையும் மிக குறைவாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








