லாட்ஜி மாடலை தொடர்ந்து டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பையும் நிறுத்தும் ரெனால்ட் நிறுவனம்...
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனது தயாரிப்பு கார்களில் டீசல் என்ஜின்களை பொருத்த போவதில்லை என ரெனால்ட் இந்தியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் நிறுவனம் டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பை நிறுவதற்கு, 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் 2020 ஏப்ரல் முதல் ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் மட்டும் தான் அறிமுகமாகவுள்ளன.

ரெனால்ட் நிறுவனம் தற்சமயம் டஸ்டர், லாட்ஜி மற்றும் கேப்ச்சர் உள்ளிட்ட மாடல்களில் 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜினை வழங்கி வருகிறது. புதிய மாசு உமிழ்வு விதியினால் வாகனங்களின் விற்பனை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் எப்படி இருக்க போகிறது என்பது தெரியவில்லை. இதனால் தான் ரெனால்ட் நிறுவனம் முன்னெச்சரிக்கையாக டீசல் வேரியண்ட்களை தயாரிக்க போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.

டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பு நிறுத்தம் மட்டுமின்றி, லாட்ஜி எம்பிவி மாடலின் தயாரிப்பு மற்றும் விற்பனையையும் இந்திய சந்தையில் நிறுத்தவுள்ளதாக ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்திருந்தது. லாட்ஜி மாடலில் ரெனால்ட் நிறுவனம் டீசல் என்ஜின் தேர்வை மட்டும் தான் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பு நிறுத்தம் குறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ வெங்கட்ராம் மாமில்லபல்லே கூறுகையில், டீசல் என்ஜின்களை அடுத்த ஆண்டு தயாரிப்பது குறித்த எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. எனவே 2020 ஏப்ரல் முதல் கேப்ச்சர் எஸ்யூவி உள்பட எதிர்கால மாடல்கள் அனைத்தும் பெட்ரோல் என்ஜின் தேர்வில் தான் அறிமுகமாகவுள்ளன என கூறிய அவர், லாட்ஜி மாடலின் தயாரிப்பு நிறுத்தத்தையும் உறுதி செய்துள்ளார்.

லாட்ஜி எம்பிவி மாடலில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்ற 1461சிசி, நான்கு-சிலிண்டர் அமைப்பை கொண்ட 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் 108 பிஎச்பி பவரையும் 245 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தி வருகிறது.

அதேநேரம் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எம்பிவி மாடலான ட்ரைபர் காரை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்6 ட்ரைபர் எம்பிவி மாடலின் அறிமுகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் கார்களின் விலைகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மாமில்லபல்லே கூறியுள்ளார்.

மேலும் ட்ரைபர் மாடலில் தற்சமயம் உள்ள பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வையும் கூடுதலாக வழங்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் ட்ரைபர் மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூடுதல் என்ஜின் தேர்வை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ரெனால்ட் நிறுவனத்தின் இந்த டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பு நிறுத்த முடிவு ஒரு விதத்தில் நல்ல யோசனை தான். ஏனெனில் டீசல் என்ஜின்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றும் பணி செலவு பிடித்ததாக உள்ளது. இதனால் டீசல் வேரியண்ட்களின் விலையை ஒரே அடியாக உயர்த்த வேண்டும் என்கிற கட்டாயம் நிறுவனத்திற்கு ஏற்படும். ஏற்கனவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் வேரியண்ட்களை தான் தங்களது முதல் தேர்வாக கொண்டுள்ளனர்.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








