ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...
ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார்களை களமிறக்கி வருகின்றன. ஹூண்டாய் நிறுவனம் கூட சமீபத்தில் வெனியூ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனமும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை களமிறக்கவுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய 7 சீட்டர் சப்காம்பேக்ட் எம்பிவி காரான ட்ரைபரை, சமீபத்தில் வெளியிட்டது. ரெனால்ட் ட்ரைபர் கார் வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த கார் எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் எச்பிசி போட்டியிடும்.

ET Auto தளத்திற்கு பேட்டியளித்த ரெனால்ட் ஏஎம்ஐ-பசிபிக் பிராந்தியத்தின் மூத்த துணை தலைவர், சேர்மன் ஃபேப்ரிஸ் கம்போலைவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்பட ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் ஃபேப்ரிஸ் கம்போலைவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரெனால்ட் நிறுவனத்தின் எச்பிசி கார், க்விட் காரின் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனத்தால் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதே சமயம் ரெனால்ட் எச்பிசி காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக க்விட் காரில் உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷன் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் எச்பிசி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக பல்வேறு கார் நிறுவனங்களும் இதே முடிவை எடுத்துள்ளன.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தற்போது சற்றே தடுமாறி வருகிறது. எனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல்வேறு புதிய தயாரிப்புகளை வரிசையாக களமிறக்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் ட்ரைபர், எச்பிசி உள்ளிட்ட கார்கள் களம் காணவுள்ளன.

இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக க்விட் ஹேட்ச்பேக் மற்றும் டஸ்டர் எஸ்யூவி கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை ரெனால்ட் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இவை இரண்டும்தான் இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








