சைபர்டிரக்கை உலோக உருண்டையை வைத்து சோதித்த டெஸ்லா... கிண்டலடித்த ரேஸ்வானி மோட்டார்ஸ்!
சைபர்டிரக் எலெக்ட்ரிக் வாகனத்தின் பாதுகாப்பு அம்சத்தை உலோக உருண்டை மூலமாக சோதித்து காட்டிய டெஸ்லா நிறுவனத்தை ரேஸ்வானி நிறுவனம் கிண்டலடித்துள்ளது. அத்துடன்,உண்மையான பாதுகாப்பு சோதனைக்கு வருமாறும் டெஸ்லாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் உலக பிரபலமான டெஸ்லா நிறுவனம் கடந்த 21ந் தேதி சைபர்டிரக் என்ற பெயரில் வினோதமான எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த சைபர்டிரக் குண்டுதுளைக்காத ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் உறுதியான கட்டமைப்பை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அறிமுக நிகழ்ச்சியின்போது இதன் விசேஷ ஜன்னல் கண்ணாடிகளை உலோக உருண்டையை கொண்டு தாக்கி காட்டி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் முன்னிலையில், டெஸ்லா டிசைன் பிரிவு உயர் அதிகாரி இந்த செயல் விளக்கத்தை நடத்தினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டெஸ்லா சைபர்டிரக்கின் குண்டு துளைக்காத ஜன்னல் கண்ணாடி கடுமையாக சேதமடைந்தது. இது நிகழ்ச்சியில் இருந்தோரையும், நேரலையில் பார்த்தவர்களையும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. சைபர்டிரக் ஜன்னல் கண்ணாடிகள் கடுமையாக சேதமடைந்தது குறித்து எலான் மஸ்க் பூசி மெழுகினார்.

மேலும், பங்கு சந்தையில் டெஸ்லாவின் பங்குகள் மதிப்பு சரிவை சந்தித்தது. பிரச்னை சரிசெய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், இந்த வினோத எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் வாடிக்கையாளர்களை கவருமா என்று பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்த எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்கிற்கு முன்பதிவு குவிந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது ஆட்டோமொபைல் உலகை ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான கஸ்டமைஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரேஸ்வானி மோட்டார்ஸ் டெஸ்லா நிறுவனத்தை தனது இன்ஸ்டா பக்கம் மூலமாக கிண்டலாக ஒரு அழைப்பை விடுத்துள்ளது.

அதில், வாகனத்தின் உண்மையான பாதுகாப்பை சோதிப்பதற்கு நீங்கள் உலோக உருண்டைகளை எடுத்து வாருங்கள்; நாங்கள் ஏகே எந்திர துப்பாக்கியுடன் வருகிறோம்," என்று டெஸ்லா மோட்டார்ஸ்க்கு சவால் விடுத்துள்ளது ரேஸ்வானி நிறுவனம்.

மேலும், இன்ஸ்டா பதிவில் இருக்கும் படத்தில், ரேஸ்வானி நிறுவனத்தின் டேங்க் என்ற குண்டுதுளைக்காத எஸ்யூவியை எந்திர துப்பாக்கி மூலமாக சோதிக்கும் படமும், கீழே உலோக உருண்டை மூலமாக சைபர்டிரக்கை சோதிக்கும் படமும் இடம்பெற்றுள்ளது. எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்கும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

ஜீப் ரேங்லர் அடிப்படையில் ரேஸ்வானி நிறுவனம் உருவாக்கி இருக்கும் குண்டுதுளைக்காத எஸ்யூவிதான் டேங்க். இந்த விசேஷ எஸ்யூவியில் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜீப் மற்றும் டாட்ஜ் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தேர்வுகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் தேர்வில் கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








