மாஸ்டர் பிளான்... மோடி-நிதின் கட்கரியின் அதிரடியால் இந்தியாவில் நடந்த அதிசயம்... என்ன தெரியுமா?
மோடி-நிதின் கட்கரியின் அதிரடியால் இந்தியாவில் அதிசயம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உரிய தண்டனை கிடைக்காததே இதற்கு காரணமாக இருந்து வந்தது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன் ஒரு பகுதியாக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்பின் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு சில மாநில அரசுகளும் கூட இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை பல மடங்கு உயர்த்தியிருந்ததே இதற்கு காரணம்.

ஆனால் இது இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு முயற்சியே என மத்திய அரசு விளக்கம் அளித்தது. மத்திய அரசு கூறியதை போல், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக கடுமையாக குறைந்துள்ளது.

இந்த தகவலை நாடாளுமன்றத்தில் தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சண்டிகரில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், சண்டிகரில் இரண்டு பேர் மட்டுமே சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அங்கு 8 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்திருந்தனர். அதே சமயம் புதுச்சேரியில் கடந்த 2018 செப்டம்பர், அக்டோபர் மாதங்களுடன் ஒப்பிடும்போது, 2019ம் ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் அளித்த எழுத்து பூர்வமான பதிலில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். சண்டிகர் மற்றும் புதுச்சேரியை போல் உத்தரகாண்ட்டிலும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு கடந்த 2018 செப்டம்பர், அக்டோபரில் 78 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்திருந்தனர்.

ஆனால் அந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபரில் 61 ஆக குறைந்துள்ளது. இது 22 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் குஜராத் மாநிலத்தில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளது. அங்கு கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 557 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்திருந்தனர்.

ஆனால் நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குஜராத் மாநிலத்தில் 480 பேர் மட்டுமே சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். இந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 459 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்திருந்தனர்.

ஆனால் நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், 411 பேர் மட்டுமே அங்கு சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதாவது பீகார் மாநிலத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10.5 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் உத்தர பிரதேச மாநிலத்தில் சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 1,355 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். ஆனால் கடந்த 2018ம் ஆண்டின் இதே மாதங்களில் அங்கு 1,503 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்திருந்தனர். மேற்கண்ட மாநிலங்களை போல் கேரளாவிலும் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் குறைந்துள்ளன.

கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் சாலை விபத்துக்களில் சிக்கி 321 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் அங்கு நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 314 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது 2.1 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. உயர்த்தப்பட்ட அபராதங்களுடன் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இது கஜானாவை நிரப்பும் முயற்சி என்று கூட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ஒரு சிலர் வசைபாடினர். ஆனால் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை சரி என்று காட்டுகிறது.

அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதனை செலுத்த பயந்து கொண்டு, பலர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற தொடங்கியிருக்கலாம். இதன் காரணமாக சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








