ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவுக்கு புதிய தலைவர்: யார் தெரியுமா?
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு பிரிவு தலைவராக ஜோசெப் கபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யார் என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனத்தின் கார்களின் டிசைன் மற்றும் சொகுசு வசதிகள் பெரும் கோடீஸ்வரர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவராக இருந்த கைல்ஸ் டெய்லர் கடந்த ஆண்டு பொறுப்பிலிருந்து விலகினார். ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி உருவாக்கதில் பங்கு வகித்த டெய்லர் விலகியதையடுத்து, அந்த இடத்திற்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்க ரோல்ஸ்ராய்ஸ் முடிவு செய்தது.

இதுதொடர்பாக மிக தீவிரமான பரிசீலனைகளுக்கு பின்னர் ஜோசெப் கபன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் கைல்ஸ் டெய்லருக்கு சளைத்தவரல்ல. உலகின் அதிவேக கார் மாடலாக புகழ்பெற்ற புகாட்டி வேரான் காரை வடிவமைத்தவர்தான் இந்த ஜோசெப் கபன்.

லண்டனிலுள்ள ராயல் கவின் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும், இங்கிலாந்திலேயே படித்தவர் என்பதால், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்தவர். எனவே, அவரை தனது புதிய டிசைன் பிரிவு தலைவராக நியமித்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ்.

புகாட்டி வேரான் காரின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்த இவர் அதன் பின்னர் ஆடி, ஸ்கோடா மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவராக பொறுப்பு வகிந்து வந்தார்.

இந்த நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பொறுப்புடன் இந்த பதவியை ஏற்றுள்ளார். அதாவது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ்தான் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எனவே, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்வதற்கு சரியான நபராக கருதி, பிஎம்டபிள்யூ நிறுவனம் ரோல்ஸ்ராய்ஸ் டிசைன் பிரிவு தலைவராக பொறுப்பை வழங்கி இருக்கிறது. இவரது தலைமையின் கீழ் ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழலாம் என்று உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications