5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் மோதியதில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியது யார்? என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

டெல்லியில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்று சாணக்யபுரி. இங்குள்ள வினய் மார்க் என்ற இடத்தில் ஏராளமான வெளிநாட்டு தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 18ம் தேதியன்று (திங்கள்), பென்ட்லீ பென்டேகா (Bentley Bentayga) கார் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.

லக்ஸரி எஸ்யூவி (Luxury SUV) வகையை சேர்ந்த பென்ட்லீ பென்டேகா காரின் விலை சுமார் 4.40 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போதைய நிலையில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன்கள் உள்பட ஒரு சிலரிடம்தான் பென்ட்லீ பென்டேகா கார் உள்ளது.

இந்த சூழலில் அதிவேகத்தில் வந்த பென்ட்லீ பென்டேகா கார், ஆட்டோ ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில், குல்சாத் அல்ஜினோவா (51), அல்மா குல் அட்டபெயா (33) மற்றும் குலியா யாம் (55) என்ற மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் மூவரும் துர்க்மெனிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா வந்திருந்தனர். ஆனால் திடீரென நடைபெற்ற கோர விபத்தில் சிக்கி கொண்டனர். இவர்கள் தவிர டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவரும், ஆட்டோ டிரைவருமான ரகுபிர் சிங்கும் படுகாயமடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இதில் குல்சாத் அல்ஜினோவா பரிதாபமாக உயிரிழந்தார்.

எஞ்சிய 3 பேரும் மிகவும் அபாயமான கட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மிகவும் விலை உயர்ந்த காரை அதிவேகத்தில் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்திற்கு காரணமான வாலிபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், அவரது பெயர் அஸஸ் சிங் சதா என்பது தெரியவந்தது.

இவருக்கு தற்போது 19 வயது மட்டுமே ஆகிறது. இவர் பிரபல தொழில் அதிபர் பான்டி சிங் சதாவின் சகோதரர் மகன் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மது வியாபாரியான பான்டி சிங் சதாவை பலரும் அறிந்திருக்க கூடும்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் பான்டி சிங் சதா, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பான்டி சிங் சதா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2012ம் ஆண்டு அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டனர்.

சினிமா படங்களை விஞ்சும் வகையிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்றில்தான் இருவரும் உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில், சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதுதான், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

பான்டி சிங் சதாவின் மரணம் இன்று வரை மர்மமாகவே இருந்து வரும் சூழலில், அவரது சகோதரர் மகன் அதிவேகமாக காரை ஓட்டி, கோர விபத்தை நிகழ்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடைபெற்றபோது அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பென்ட்லீ நிறுவன கார்களின் 'பில்ட் குவாலிட்டி' (Build Quality) எனப்படும் கட்டுமான தரம் உறுதியாக இருக்கும். ஆனால் இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி விட்டது.

இதன்மூலம் கார் அதிவேகத்தில் வந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். தற்போது அஸஸ் சிங் சதா மீது ஐபிசி செக்ஸன் 279, 304 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் வழக்கு எத்தனை ஆண்டுகளுக்கு நடைபெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கு விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் பேர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிவேகம், குடிபோதையில் வாகனங்களை இயக்குவது ஆகியவையே பெரும்பாலான விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆனால் இத்தகைய தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு, இந்திய சட்ட திட்டங்கள், உரிய நேரத்தில், சரியான தண்டனையை வழங்க தவறி விடுகின்றன.

இதனால் ஏற்படும் அலட்சியமும் கூட சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு சில வெளிநாடுகளில், சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்களுக்கு உடனுக்குடன், கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாகதான் அங்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்தியாவும் கடுமையான சட்ட திட்டங்களை இயற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஒரே கோரிக்கையாகவும் உள்ளது.

இதுதவிர விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வாகன ஓட்டிகளும் முன்வர வேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது, சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவற்றின் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.

இந்த சூழலில், கோர விபத்தை ஏற்படுத்திய அஸஸ் சிங் சதாவிற்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிவேகத்தில் காரை ஓட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அஸஸ் சிங் சதா மறுத்தார். இருந்தபோதும் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்து விட்டது. ஆனால் இந்த தண்டனை மட்டும் போதுமா? வழக்கை விரைந்து முடித்து, தவறு இருக்கும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.


Click it and Unblock the Notifications








