சூப்பரான உத்தரவு... சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் எவ்வளவு பரிசு தெரியுமா?
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துக்களில் சிக்கிய பெரும்பாலானோருக்கு இங்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் அவர்களில் பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களில் 50 சதவீதம் பேரின் மரணத்திற்கு, அதாவது கிட்டத்தட்ட சரி பாதி பேரின் உயிரிழப்பிற்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போவதே காரணம் என மேலும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உண்மைதான். சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நம்மில் பெரும்பாலானோர் முன்வருவது கிடையாது.

காவல் நிலையம், நீதிமன்றம் என வீணாக அலைய வேண்டியது வரும் என்ற பயமே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது, வீணாக அலைக்கழிக்க கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், பல்வேறு விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களிடம் பாலினம், மதம் மற்றும் ஜாதி என எந்தவிதமான பாகுபாடுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்ட கூடாது.

அதேபோல் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்த உடன், போலீசார் உடனே அவர்களை கிளம்ப அனுமதிக்க வேண்டும். சாலை விபத்து தொடர்பான தகவல்கள் அவர்களிடம் இருந்தால் போலீசார் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வேறு எந்தவிதமான கேள்வியையும் கேட்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்களிடம் அவர்களின் பெயர், அடையாளம், முகவரி உள்ளிட்ட எந்த தகவலையும் போலீசார் கேட்க கூடாது. இதுபோல் சட்ட ரீதியிலான பாதுகாப்பு உள்ளதால், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு அனைவரும் துணிந்து உதவலாம். ஆனால் இன்னமும் கூட இந்த விஷயத்தில் பலருக்கும் தயக்கம் உள்ளது.

எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முன் வருவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் புதுச்சேரி அரசு தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

சாலை விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு தக்க நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெகு விரைவில் வெளியிடப்படும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், புதுச்சேரி சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 28) தாக்கல் செய்யப்பட்டது. அப்போதுதான் இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். பரிசு தொகை சிறியது, பெரியது என்பதற்கு அப்பாற்பட்டு இது வரவேற்க வேண்டிய ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








