போலீசார்-ஆர்டிஓ அதிகாரிகள் கூட்டணி... வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைய காரணம் இதுதான்...
போலீசார்-ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் கூட்டணியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து நிற்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டேவும் செல்கிறது.

போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே தவறு செய்யும் வாகன ஓட்டிகள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் இ-சலான்களை வினியோகித்து வருகின்றனர்.

இதற்கு உண்டான அபராத தொகையை வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை போல் இதையும் பின்பற்றுவது கிடையாது. இந்த சூழலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசாரால் வழங்கப்பட்ட இ-சலான்களுக்கு அபராத தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அகமதாபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தவறு செய்த வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அபராதத்தை செலுத்த தவறிய வாகன ஓட்டிகளால், பெயர் மாற்றம் உள்பட ஆர்டிஓ அலுவலகம் சார்ந்த எந்த பணிகளையும் செய்ய முடியாது.

அத்துடன் அபராத தொகையை செலுத்தாத வரை டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கவும் முடியாது. அதே சமயம் முதல் முறை அபராதத்தை செலுத்தி விட்டு மீண்டும் அதே தவறை செய்தாலும் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க முடியாது. இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''அபராதம் செலுத்த தவறிய வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், வாகன பதிவை ஏன் ரத்து செய்ய கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி விட்டு அபராதம் செலுத்தாமல் உள்ள வாகன ஓட்டிகளுக்கு நாங்கள் எவ்வித தடையில்லா சான்றையும் வழங்கப்போவதில்லை. அத்துடன் வாகன பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆவணங்களும் வழங்கப்படாது'' என்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய சாலைகள் நாளுக்கு நாள் மிகவும் அபாயகரமானவையாக மாறி வருகின்றன. வாகன ஓட்டிகளின் அலட்சியம் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கு பொறுப்புணர்வு வர வேண்டுமென்றால், இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதே பலரின் எண்ணமாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








