லைசென்ஸ், ஆர்சி புக் போன்று இனி இதுவும் முக்கியம்... அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் காவல்துறை!
லைசென்ஸ், ஆர்சி புக் ஆகிய ஆவணங்களைப் போலவே போலீஸார் இனி உங்கள் வாகனத்தின் ஒரு சில பாகங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது அறிமுகமாகி ஒரு மாதத்தைக் கடந்திருந்தாலும், அதன் தாக்கம் சற்று குறையவில்லை என்றே கூறலாம்.
அந்தளவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு புதிய மோட்டார் வாகன சட்டம் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய அபராத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இருப்பினும், போலீஸார் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூர் போலீஸார் ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, "மோசமான மற்றும் மிக மோசமான நிலையில் காணப்படும் டயர்களைக் கொண்டு இயங்கும் கார்களுக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, அதிக அபராதத்தை வழங்க முடியும்" என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு நகரத்தின் போக்குவரத்துத்துறை காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்கீழ், 30 ஆயிரம் கிமீ வரை ஓடிய டயர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவை, சாலையில் சீரான பிடிமானத்தை வழங்காமல், விபத்தை ஏற்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே, வழுவழுப்பான டயர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்கப்பட உள்ளது" என்றார்.

ஆகையால், இனி வரும் காலங்களில் போலீஸார், வாகன ஓட்டிகளின் ஆவணங்களை மட்டுமின்றி டயர்களையும் ஆராய்ந்து பார்ப்பார்கள் என தெரிகின்றது. அதில், 30 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக அந்த டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், அந்த வாகனத்திற்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இந்த விதி, புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல. அது, பழைய மோட்டார் வாகன சட்டத்தில் இருந்தே காணப்படுகின்றது.

அதேசமயம், இந்த வழுவழுப்பான டயரை பயன்படுத்தும் வாகனங்களுக்கு ரூ. 100 என்ற அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான செல்லாண் ஏற்கனவே ஓர் வாகன ஓட்டிக்கு வழங்கிவிட்டதாக பெங்களூர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த வாகன ஓட்டி போலீஸாரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் ரூ. 100 வரை அபராதம் விதிப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், இதுவரை 19 பேருக்கு அபராதத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக பெங்களூர் மிர்ரர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே, புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ், போலீஸார் தேய்ந்த டயர்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அபராதம் விதிக்க உள்ளனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வழு வழுப்பான நிலையில் காணப்படும் டயர்களால் பெரும் விபத்துகள் ஏற்படலாம். இவை, வாகனம் வேகமாக செல்லும்போது சீரான பிடிமானத்தை வழங்குவதில்லை. ஆகையால், பிரேக்கினை பிடிக்கும்போது அது எதிர்வினையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும், ஒரு வாகனம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் அல்லது அதன் இயந்திரம் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தேய்ந்துபோன டயர்கள் விபத்தில் சிக்குவதற்கான அதிகபட்ச வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் அவை பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.

இதன்காரணமாகவே, பல வளர்ந்த நாடுகள் தேய்ந்த டயர்களை பயன்படுத்துவதற்கு அதிகபட்ச அபராதத்தை விதித்து வருகின்றன. இதனை தற்போது இந்தியாவும் கடைபிடிக்க தொடங்கியுள்ளது.
அதேசமயம், கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், கேரளா போன்ற இந்தியாவின் அனைத்து மாநில போலீஸார்களும் இந்த நடவடிக்கையினை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








