கடல் நீரிலிருந்து வாகனங்களுக்கான ஹைட்ரஜன் எரிபொருள்: விஞ்ஞானிகள் அசத்தல்!
கடல் நீரிலிருந்து வாகனங்களுக்கான ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்யும் முறையை அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகன எரிபொருளை உருவாக்கும் முயற்சிகளில் மிக தீவிரமான முறையில் நடந்து வருகிறது. தற்போதைக்கு மின்சார வாகனங்கள் சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. மறுபுறத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் வாகனத்தை இயக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.

ஆனால், ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும், அது எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் வாகனங்களில் பொருத்துவது மற்றும் சேமித்து வைப்பதில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. எனினும், அ்தனை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன.

இந்த சூழலில், நல்ல தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரித்து, அதிலிருந்து வெளியேறும் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் முறைகளில் வெற்றி காணப்பட்டுவிட்டது. இதனை எலக்ட்ரோலைசிஸ் என்று அழைக்கின்றனர். இரண்டு மின்முனைகள் மூலமாக மின்சாரத்தை தண்ணீரில் செலுத்தும்போது எதிர்முனையிலிருந்து ஹைட்ரஜன் வாயு குமிழியாக வெளியேறும். இதனை கேத்தோடு என்றும், நேர்முனையிலிருந்து வெளியேறும் ஆக்சிஜனை ஆனோடு என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், கடல் நீரில் இந்த முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரித்தெடுக்க முடிவதில்லை. இந்த நிலையில், முதல்முறையாக கடல் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முறையில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் முதல்கட்ட வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

அவர்களது தொழில்நுட்ப முறை அந்நாட்டு தேசிய அறிவியல் இதழிலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், கடல் நீரில் மின்சாரத்தை செலுத்தி ஹைட்ரஜன், ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் முறையில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடல் நீரில் மின்சாரத்தை செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும் நேர்மின் முனையானது விசேஷ பூச்சுடன் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஆக்சிஜனை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பிரித்தெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த முறையின் மூலமாக, நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடலுக்குள் ஆய்வு மற்றும் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஸ்கூபா டைவிங் எந்திரங்களில் இந்த தொழில்நுட்ப முறையை பயன்படுத்த முடியும். இதனால், ஹைட்ரஜனை எரிபொருளாகவும், ஆக்சிஜனை நீர்மூழ்கி கப்பல்களில் பயணிப்பவர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்கள் சுவாசிக்க பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்த முறைக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின்சக்தி முறையில் பெறப்படுவதால், 100 சதவீதம் அளவுக்கு இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தொழில்நுட்ப முறை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்காக இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் கூறி இருக்கின்றனர்.

மேலும், தற்போது ஹைட்ரஜன் எரிபொருளுக்கு தேவை குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக அளவில் தேவை ஏற்படும்போது நல்ல தண்ணீரை பயன்படுத்த இயலாது. ஏனெனில், தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருவதால், கடல் நீரிலிருந்து எடுக்கும் முறைதான் உசிதமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








