வந்தாச்சு அடுத்த ஆப்பு: 25 மடங்கு உயரும் மறு பதிவு கட்டணம்... மோடி அரசின் அதிரடி!!!
வாகனங்களுக்கான மறு பதிவு கட்டணத்தை 25 மடங்கு உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து வாகனம் மற்றும் சாலை சார்ந்த விவகாரத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், அண்மையில் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

இதில், முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை வசூலிக்கும் வகையிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகையால், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 100 என்ற ஹெல்மெட் இல்லா பயணத்திற்கான அபரதாம் தற்போது ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து விதிமீறல்களுக்குமான அபராதமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நாட்டிற்கு மற்றுமொரு அச்சுறுத்தலாக மாறி வரும் காற்று மாசுபடுதலுக்கு முற்றி புள்ளி வைக்கின்ற வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது அண்மைக் காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பதினைந்து ஆண்டு கால பழைய வாகனங்களின் மறு பதிவினை 25 மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பழைய வாகனங்களை ஒழித்துக்கட்டுவதுடன், காற்று மாசினை கணிசமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான திட்டத்தை மத்திய பரிசீலித்து வருகின்றது. இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுமேயானால், 15 ஆண்டுகள் பழைய தனியார் அல்லது வர்த்தக ரீதியில் இயங்கி வரும் வாகனங்களை பயன்படுத்துவது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிடும்.

ஏனென்றால், மத்திய அரசு பழைய வாகனங்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை தற்போது உள்ள கட்டணத்தைக் காட்டிலும் 25 மடங்கு உயர்த்தி அறிவிக்க இருக்கின்றது. இதேபோன்று எஃப்சி சான்று பெறுவதற்கான கட்டணமும் 125 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட உள்ளது.

இந்த புதிய திட்டம் 2020ம் ஆண்டின் மத்தியில் அமல்படுத்தப்படாலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணியில் மத்திய அரசும், போக்குவரத்துத்துறை அமைச்சகமும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது.

மேலும், இத்திட்டத்தினை அமலப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. அதில், ஸ்கிராப்பிங் மற்றும் பழைய வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகப்படுத்துதல் குறித்த கருத்துக் கேட்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், புதிய ஸ்கிராப்பிங் மையங்களை திறப்பதற்கான பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், கூடிய விரைவில் போதுமான அளவு ஸ்கிராப் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகின்றது.
இத்திட்டத்தின்படி, 15 வயதுக்கும் மேற்பட்ட கனரக (பேருந்து, லாரி, டிரக்) வாகனங்களின் மறு பதிவிற்காக ரூ. 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. தற்போது, வெறும் 200 ரூபாயிலேயே இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேபோன்று, மினி டிரக், கார் மற்றும் கால் டாக்ஸி வாகனங்களுக்கான கட்டணமும் ரூ. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட உள்ளது.
தற்போது, வர்த்தக ரீதியாக இயங்கும் இந்த வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் எஃப்சி சான்று பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இதனை இனி வரும் காலங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழைய அல்லது தகுதியற்ற வாகனங்கள் சாலையில் இயங்குவதைத் தவிர்க்கும் விதமாக இத்தகைய அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு கையிலெடுத்திருப்பதாக காரணம் கூறப்படுகின்றது.

அதேசமயம், இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்த வணிக வாகனங்களுக்கான பதிவு மற்றும் மறு பதிவிற்கான கட்டணம் உயர்வு செய்யப்படவில்லை என தெரிகின்றது.
ஆனால், தனியார் வாகனங்களைப் பொறுத்தவரை, 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான மறு பதிவு கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. அதேசமயம், எஃப்சி சான்றுக்கு கட்டணம் அதிகரிப்பு இருக்காது என தெரிகின்றது.

இதேபோன்று, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மறு பதிவு கட்டணமும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு தற்போது 300 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று, புதுப்பிக்கப்படும் பதிவு சான்று ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியகும். ஆகையால், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் பின்னர் அந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் மீண்டும் மறு பதிவு செய்ய வேண்டும்.

பழைய வாகனங்களை ஒழித்துக்கட்டும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகையால், மக்களை ஈர்க்கும் வகையில் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகளை வழங்கப்பட உள்ளது.

அந்தவகையில், பழைய வாகனத்த ஸ்கிராப் செய்தால் புதிய வாகனத்திற்கான பதிவு கட்டணத்தில் சலுகை வழங்க முடிவு செய்துள்ளது. அத்துடன், புதிய வாகனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்க வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








