புதிய வரலாறு எழுதப்போகும் ரெனால்ட்... மலிவான விலையில் 2 புதிய கார்களை அடுத்தடுத்து களமிறக்குகிறது...
இந்திய மார்க்கெட்டில் தன்னை நிலை நிறுத்தி கொள்வதற்காக ரெனால்ட் நிறுவனம் மலிவான விலையில் 2 புதிய கார்களை அடுத்தடுத்து களத்தில் இறக்குகிறது.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் சோபிக்க முடியாமல் திணறி கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் க்விட் (Kwid) தவிர வேறு கார்கள் எதுவும் விற்பனையில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அதற்காக சோர்ந்து விடாமல், எதிர்நீச்சல் அடிக்க முயற்சி செய்து வருகிறது ரெனால்ட்.

தற்போது உள்ள மாடல்களை அப்டேட் செய்வது மற்றும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வது ஆகியவற்றின் மூலம் விற்பனையை அதிகரிக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள், கார்கள் விற்பனை தற்போது இருப்பதை காட்டிலும் இரு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது அந்நிறுவனத்தின் இலக்கு.

இதற்காக நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் (2020) 2 புத்தம் புதிய கார்களை ரெனால்ட் களத்தில் இறக்கவுள்ளது. இதில், முதலாவது தயாரிப்பு வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்விட் பிளாட்பார்ம் சார்ந்த இந்த கார் தற்போது ஆர்பிசி (RBC) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

எம்பிவி (MPV) ரக காரான இது மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga) கடும் சவால் அளிக்கவுள்ளது. இதற்கு காரணம் அதன் விலைதான். ரெனால்ட் ஆர்பிசி எம்பிவி காரானது, ரூ.4.5 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனம் மார்க்கெட்டில் களமிறக்க திட்டமிட்டுள்ள இரண்டாவது தயாரிப்பு ஆல் நியூ டஸ்டர் (Renault Duster). எஸ்யூவி ரக காரானது, 2020ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தம் புதிய டஸ்டர் காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முதல் தலைமுறை டஸ்டர் காரை ரெனால்ட் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது 7 ஆண்டுகள் கடந்து விட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில் போட்டி நிறுவனங்களில் புதிய மாடல்கள் களம் கண்டு விட்டதால், ரெனால்ட் டஸ்டர் வாடிக்கையாளர்களுக்கு சலுப்பு தட்டும் காராகி விட்டது.

டஸ்டரின் விற்பனையை அதிகரிப்பதற்காக, ஃபேஸ்லிஃப்ட், மெகா தள்ளுபடி போன்ற ஆயுதங்களை ரெனால்ட் நிறுவனம் கையில் எடுத்தாலும், அவை பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில்தான் டஸ்டர் கார்கள் விற்பனையாகி வருகின்றன.

எனவே விற்பனையில் 'கம்பேக்' கொடுக்க வேண்டுமென்றால், புத்தம் புதிய டஸ்டர் மாடலை களத்தில் இறக்கியாக வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாகதான் இரண்டாம் தலைமுறை டஸ்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் முடிவு செய்துள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கார் லான்ச் ஆகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வெங்கட்ராம் சமீபத்தில் அளித்த பேட்டி இதனை உறுதி செய்வது போல் உள்ளது. ''2 புதிய தயாரிப்புகளை லான்ச் செய்யவுள்ளோம். இதில் ஒன்று ஜூலையில் (2019) லான்ச் ஆகும். இரண்டாவது அதற்கு அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும்'' என்பதுதான் அவரது பேட்டியின் சாராம்சம்.

புதிய டஸ்டர் காரானது, மார்க்கெட்டை விட்டு வெளியேறவுள்ள மாடலை ஒத்திருக்கும் என்றாலும், ஸ்டைல் முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. அதேபோல் தற்போதைய வெர்ஷனில் உள்ள இன்ஜின் ஆப்ஷன்கள், புதிய மாடலுக்கு கொண்டு செல்லப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிகளே இதற்கு காரணம்.

மிக கடுமையான பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ளன. விதிகளுக்கு இணங்க வேண்டுமென்றால், அனைத்து கார் நிறுவனங்களும் இன்ஜினில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை இது கட்டாயமாக்குகிறது. பிஎஸ்6 விதிகளுக்கு இணங்க வேண்டுமென்றால், ரெனால்ட் டஸ்டரின் இன்ஜினில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படும் என தெரிகிறது.

புதிய ரெனால்ட் டஸ்டர் 7 சீட்டர் மாடலாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி எஸ்-க்ராஸ் (Maruti S-Cross) உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும். ரெனால்ட் நிறுவனம் தன்னை மார்க்கெட்டில் நிலை நிறுத்தி கொள்ள இந்த புதிய மாடல் உதவக்கூடும்.


Click it and Unblock the Notifications








