5 நிமிட சார்ஜில் 70 கிமீ பயணம்... மாயாஜால எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம்!!
சில நிமிடங்களில் பேட்டரியை அதிகபட்ச அளவு சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்த மாயஜால எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பும், அவசியம் அதிகமாகி வருகிறது. இருப்பினும், பேட்டரி திறன் மற்றும் பயண தூரம் என்பது வாடிக்கையாளர்களை தயங்க வைக்கும் விஷயமாக இருக்கிறது. ஒரே சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் வாகனங்கள், குறைவான நேரத்தில் பேட்டரியை அதிகபட்ச அளவு சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஆட்டோமொபைல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், ஒரு மணிநேரத்திற்குள் பேட்டரியை அதிகபட்சமாக சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்த சார்ஜர்களை ஹூண்டாய் கோனா காருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் வர இருக்கும் எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் இதேபோன்றே சார்ஜர் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. டாடா நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் காருக்கான விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனத் துறையிலேயே மிக குறைந்த நேரத்தில் அதிக மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்ட மாயஜால பேட்டரியுடன் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த ஷேடோ குழுமத்தின் அங்கமாக செயல்படும் பெங்களூரை சேர்ந்த அடரின் எஞ்சினியரிங் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த புதிய ஆட்டோரிக்ஷா தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கின்நறன. எரிக் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த எரிக் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவின் பேட்டரியை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வழங்கும். தற்போதைய நிலவரத்தில் இந்த எரிக் ஆட்டோரிக்ஷாதான் மிக குறைவான நேரத்தில் போதிய தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. எனவேதான் இதனை மாயஜால ஆட்டோரிக்ஷவாக குறிப்பிட்டுள்ளோம்.
பொதுவாக, நகர்ப்புற பயன்பாட்டிற்கான போக்குவரத்தில் இந்த எரிக் ஆட்டோரிக்ஷாவின் சார்ஜர் நடைமுறை பயன்பாட்டிற்கு மிகச் சிறந்ததாக இருக்கும் என்று நம்பலாம். கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் கூட அடிப்படையான ரேஞ்ச் மற்றும் சார்ஜருடன் வ்நதன.
ஆனால், இந்த புதிய எரிக் ஆட்டோரிக்ஷா மாடலானது எலெக்ட்ரிக் வாகனத் துறையில் புதிய புரட்சிக்கு வித்திடும் தொழில்நுட்பத்துடன் வர இருப்பதாகவே கருதப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டிற்கு மிகச் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுவதால், சிறப்பான வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
அதிக திறன் வாய்ந்ததாக கருதப்படும் லித்தியம் அயான் பேட்டரியை விட சற்று மாறுபட்ட டை எலெக்ட்ரிக் பேட்டரி தொகுப்பு இதில் பயன்படுத்தப்பட இருக்கிறது. பேட்டரியில் நிகழும் ரசாயன மாற்றம் மூலமாக விரைவாக சார்ஜ் ஏற்றும் வாய்ப்பை இந்த பேட்டரி வழங்கும் என ஷேடோ - அடரின் கூட்டணி தெரிவிக்கிறது.
எரிக் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை உற்பத்தி செய்வதற்காக மிகப்பெரிய திட்டத்துடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது ஷேடோ குழுமம். இதற்காக ரூ.71 கோடி மதிப்பீட்டில் புனே அருகில் புதிய வாகன உற்பத்தி ஆலையையும் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 12,000 ஆட்டோரிக்ஷாக்களை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது.
இந்த ஆட்டோரிக்ஷாவில் பயன்படுத்தப்படும் பேட்டரி மைனஸ் 20 டிகிரி முதல் 60 டிகிரி வரையிலான தட்பவெப்ப நிலையிலும் சிறப்பாக செயல்புரியும். அதாவது, இந்திய தட்பவெப்ப நிலைக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். ஒரு கிலோமீட்டர் ஆட்டோரிக்ஷாவை இயக்குவதற்கு ரூ.1.50 செலவாகும் என்று ஷேடோ குழுமத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சவுரப் மார்க்கண்டேயா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications