அடுத்த ஆண்டு 5 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா!
அடுத்த ஆண்டு 5 புதிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புரொஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் வர இருக்கும் இந்த 5 புதிய கார் மாடல்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் கார் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புரொஜெக்ட் 2.0 திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ கையில் எடுத்துள்ளது. அதன்படி, ரூ.8,000 கோடி முதலீட்டில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும், பல புதிய கார் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கின்றன.

இந்த நிலையில், ஸ்கோடா இந்தியா விற்பனை, சர்வீஸ் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 5 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் கார் டீலர்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக கூறி இருக்கிறார். தற்போது நாட்டிலுள்ள 53 நகரங்களில் 63 விற்பனை நிலையங்களும், 61 சேவை மையங்களும் செயல்பட்டு வருவதாகவும், இதனை வெகுவாக உயர்த்த உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ள திட்டத்தின்படி, இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் 5 புதிய கார்களில் இரண்டு புத்தம் புதிய மாடல்களாகவும், 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களாகவும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதாவது, கமிக் மற்றும் கரோக் என்ற இரண்டு புத்தம் புதிய எஸ்யூவி மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், ரேபிட் காருக்கு மாற்றாக முற்றிலும் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவுவம் தெரிய வருகிறது.

அத்துடன், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட இரண்டு கார் மாடல்களும் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு முதல் பாதியில் இந்த கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.120 கோடி செலவில் இந்தியாவில் உள்ள ஷோரூம்களை புதுப்பித்து புதிய அடையாளத்தை கொடுக்கும் முயற்சியில் ஸ்கோடா ஆட்டோ இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








