குட் நியூஸ்... புத்தம் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம் வெளியானது!
ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய கரோக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்திய சந்தையை ஒரு கை பார்த்து விடும் முனைப்போடு இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இதற்கு தக்கவாறு, பல புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள மாடல்தான் கரோக் எஸ்யூவி.

வரும் பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் கரோக் எஸ்யூவி காட்சிப்படுத்தப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி வருகையை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸேக் ஹொல்லிஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக உறுதிபடுத்தி இருக்கிறார். அத்துடன், முதலில் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கரோக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதலில் இந்த புதிய எஸ்யூவி முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதன்பிறகு வரவேற்பை பொறுத்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி டிசைனில் மிக அசத்தலாக இருக்கும். இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், லெதர் இருக்கைகள் மற்றும் கருப்பு - பீஜ் வண்ணக் கலவையிலான இன்டீரியர் தீம் ஆகியவை இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. டர்போ பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அடுத்து 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்திற்கு இணையானதாக இருக்கும்.

இந்த காரில் எதிர்பார்க்கப்படும் டீசல் எஞ்சின் தேர்வு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார்களில் பெட்ரோல் எஞ்சின் தேர்வை முதலில் அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவசம் வைத்திருக்கிறது. எனவே, டீசல் காருக்கு விசாரணை இருந்தால் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.

இந்த கார் இறக்குமதி செய்து வர இருக்கும் நிலையில், புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








