இந்தியாவில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் ஒரே நிறுவனமாகிறது!
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் மூன்று நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாற்றப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் ஆடி, போர்ஷே, புகாட்டி, ஸ்கோடா ஆட்டோ உள்ளிட்ட உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் அங்கமாக செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவிலும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பல கார் பிராண்டுகள் தனித்தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய வர்த்தகத்தை செம்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையில் எடுத்துள்ளது.

அதன்படி, புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் நிர்வாகத்தையும், புதிய கார் மாடல்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, தனது கீழ் இந்தியாவில் செயல்படும் மூன்று நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் குழுமம்.

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் ஃபோக்ஸ்வேகன் இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களையும் இணைந்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Skoda Auto VW India Private Limited) என்ற பெயரில் ஒரே நிறுவனமாக மாற்ற இருக்கிறது.

எளிமையான நிர்வாக கட்டமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கையின் மூலமாக இந்திய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையில் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் ஒரே நிறுவனமாக மாற்றப்பட இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தனது முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தனது கூட்டணியாக செயல்படும் டீலர்கள், உதிரிபாக சப்ளையர்களிடம் இந்த தகவலை அந்நிறுவனம் முறைப்படி தெரிவித்துள்ளது. கடந்த 5ந் தேதி இந்த தகவலை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வெளியிட்ட நிலையில், வரும் 21ந் தேதிக்குள் முறைப்படி இந்த புதிய நிறுவனத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கான நடைமுறைகள் செய்து முடிக்கப்பட இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்களுக்கான சட்ட தீர்ப்பாயமும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த புதிய நிறுவனத்தின் மூலமாக சிறந்த நிர்வாக மேலாண்மை மூலமாக இந்திய வர்த்தகக் கொள்கைகளில் விரைந்து இறுதி முடிவு எடுக்க முடியும். அத்துடன் புதிய கார்களை தயாரிப்பதற்கான முதலீடுகள், நிர்வாக செலவுகள் வெகுவாக குறையும்.

இதன்மூலமாக, இந்தியாவில் அதிகபட்சமான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான சிறந்த திட்டமாக இதனை ஃபோக்ஸ்வேகன் கருதுகிறது. புரொஜெக்ட் 2.0 திட்டடத்தின் மூலமாக பல புதிய எஸ்யூவி மாடல்களை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களின் பிராண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந்த புதிய நடவடிக்கை மூலமாக ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்திய வர்த்தகம் புதிய பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முடிவுகள் விரைந்து எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








