பரிசால் மெய்சிலிர்க்க வைத்த மகன்: தந்தையை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுசென்ற இளைஞரின் செயல்...!
இளைஞர் ஒருவர் தனது தந்தையை ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அளவு கடந்த தந்தை மகன் பாசத்தை எல்லாம் சமுத்திர கனியின் 'அப்பா' போன்ற சினிமா காட்சியில்தான் நாம் இதுவரை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையிலும் தந்தை, மகன் உறவு என்பது சிறப்பான பந்தமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அண்மையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், சினிமாவையேத் தோற்கடிக்கும் வகையில், தனது தந்தை மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார், ஓர் இளைஞர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவமானது, தெலுங்கான மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பெரும்பாலும் இளம் வயதுடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்களது சேமிப்பில் இருந்து எதிர்பாராத பரிசுகளை வழங்குவார்கள். ஆனால், இங்கு இந்த இளைஞர் சற்று ஒரு படி மேலேச் சென்று தனது தந்தைக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் செடான் ரக காரை பரிசை வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை விஎன்ஆர் பாவனம் என்ற யுடியூப் பக்கம் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவானது தந்தை மகன் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், மிகவும் பாச நெகிழ்ச்சியுடைய காட்சியாக அமைந்துள்ளது. அதன்படி, கலர் கலரான புகைக்கு மத்தியிலே, பட்டாசு வெடிகளுக்கு இடையே பென்ஸ்-இன் சி கிளாஸ் கார் அந்த இளைஞரின் வீட்டைத் தேடி வருகிறது. முன்னதாக, அந்த இளைஞர் அவரது தந்தையின் கண்களைக் கட்டியவாறு கீழே அழைத்து வருகிறார்.

பின்னர், அவரது கண்கள் திறந்து காணும் காட்சி, அவர் எதிர்பாராத சம்பவமாக இருந்தது. தன் மகன் தன்மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், இது இந்தளவிற்கு இருக்கும் என்பதை அவர் அப்போது தான் உணர்ந்திருப்பார். ஆனால், அவர் அப்போது கார் கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தை விட தனது மகன் வைத்திருக்கும் பாசத்தை எண்ணிதான் பூரிப்படைந்திருப்பார். அதற்கேற்ப அந்த இளைஞரின் தந்தை மற்றும் தாயின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வெளிவருவதை நம்மாலும் காண முடிகிறது.

இதுபோன்ற, பாசம் மிகுந்த காட்சிகளை, பணத்திற்காக நடிக்கும் நடிகர்கள் மூலமாக திரையில் மட்டுமே காண முடியும் என்பதை மாற்றியமைத்துள்ளார் இந்த இளைஞர். இதற்காக நாம் அந்த இளைஞருக்குத் தான் நன்றி கூற வேண்டும். ஆனால், உண்மையில் நமது பெற்றோர்களுக்கு இதுபோன்ற விலையுயர்ந்த பொருட்களால் மட்டும் அல்லாமல், நம்மால் முடிந்த ஏதோ ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தாலும், அவர்கள் இதே அளவிற்கு சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் பெற்றோர்கள் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது நம்முடைய பாசத்தையும், அன்பை மட்டும் தான், பணத்தை அல்ல.
இந்த இளைஞர் அவரது தந்தைக்கு பரிசாக வழங்கியிருக்கும் பென்ஸ் சி கிளாஸ் செடான் காரானது, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பென்ஸ் கார்களில் ஒன்றாகும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த சி கிளாஸ் செடான் கார் பிஎம்டபிள்யூவின் 3செரீஸ், ஆடி ஏ4 மற்றும் ஜாகுவாரின் எக்ஸ்இ கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டது.

இந்த காரில் வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதியை ஏற்படுத்தும் விதமாக, பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப், ட்வின் 5 ஸ்போக் அல்லாய் வீல், எல்இடி லேம்ப்ஸ், மற்றும் நியூ ஜெனரேஷன் டெலிமேடிக்ஸ் உடன் கூடிய 10.25 இன்ச் மீடியா டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செடான் கார் மூன்றுவிதமான எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

அதன்படி, இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இதில், டீசல் எஞ்ஜின் இரண்டுமே 2 லிட்டர் கொண்டவையாக உள்ளன. ஆனால், இரண்டுமே சில டியூன்அப் மாற்றங்களைப் பெற்றுள்ளது. அவ்வாறு, உயர் ரக ட்யூன்அப்பை பெற்ற 2லிட்டர் டீசல் எஞ்ஜினானது 241 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க்கயைும் வெளிப்படுத்தும். குறைவான ட்யூன்அப்-ஐ பெற்றுள்ள மற்றொரு ஆப்ஷன் 2 லிட்டர் டீசல் எஞ்ஜின் 192பிஎச்பி பவரையும், 400என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதேபோன்று, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் வேரியண்டானது, நான்கு சிலிண்டர் கொண்ட அதிகபட்சமாக 181 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும், இது 280 என்எம் டார்க்கை 3,000-4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும்.

இந்த பெட்ரோல் எஞ்ஜினுடன் இக்யூ பூஸ்ட் எனப்படும் 48 வோல்ட் மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது 16 பிஎச்பி பவரையும் 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஆரம்ப நிலை மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 40 முதல் ரூ. 48.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








