அதிரடி... ஆர்டிஓ அலுவலகங்களில் இனிமேல் புதிய வாகனங்கள் எதுவும் பதிவு செய்யப்படாது... ஏன் தெரியுமா?
ஆர்டிஓ அலுவலகங்களில் இனிமேல் புதிய வாகனங்கள் எதுவும் பதிவு செய்யப்படாது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போக்குவரத்து துறையில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடி வரும் இடங்களில் ஒன்றாக ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. எனவே ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக மேலும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் வெகு விரைவில் அமலுக்கும் வரவுள்ளது.

பொதுவாக புதிய வாகனங்கள் அனைத்தும் ஆர்டிஓ அலுவலகங்களில்தான் பதிவு செய்யப்படும். ஆனால் இனி ஷோரூம்களிலேயே புதிய வாகனங்களை பதிவு செய்ய அதிரடியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஏஜெண்ட்களின் தலையீடு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பதிவு செய்வதற்காக தற்போது புதிய சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சாப்ட்வேர் வாகன ஷோரூம்களுடன் இணைக்கப்படும். இந்த திட்டம் குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், ''வாகன பதிவு நடைமுறைகளை ஷோரூம்களுக்கு மாற்ற தேவையான சாப்ட்வேரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது அரசின் அனுமதிக்காக நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம். சாப்ட்வேர் தயார் ஆனவுடன், முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு சில ஷோரூம்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி பார்க்க உள்ளோம்'' என்றனர். வாகனங்களை பதிவு செய்ய தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் வித்தியாசமானது.

இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு விட்டால், வாகன உரிமையாளர்கள் பதிவு பணிகளுக்காக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. அத்துடன் புதிய வாகனங்களை பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் மிகவும் எளிமையானதாக மாறிவிடும்.

இந்த புது திட்டத்தின்படி மோட்டார் வாகன ஆய்வாளர் நேரடியாக ஷோரூமிற்கு வந்து, வாகன ஆவணங்கள், இன்வாய்ஸ்கள், ஃபார்ம் 21 மற்றும் 22, சேஸிஸ் நம்பர் ஆகியவற்றை ஆய்வு செய்வார். வெரிஃபிகேஷன் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த பின், ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து புதிய வாகனங்களுக்கு உடனடியாக பதிவு எண் வழங்கப்பட்டு விடும்'' என்றனர்.

அதே சமயம் பேன்ஸி நம்பர் வேண்டும் என வாகன உரிமையாளர்கள் விரும்பும் பட்சத்தில், அவர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றுதான் ஆக வேண்டும். புதிய வாகனத்திற்கு பேன்ஸி நம்பரை பொறுத்தவரை, தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

சாப்ட்வேர் தயார் செய்யப்பட்ட உடன் ஐதராபாத் நகரின் ஒரு சில டீலர்ஷிப்களில் இந்த புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு பதிவு பணிகளுக்காக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் படையெடுக்கின்றன.

எனவே அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் நான்-டிரான்ஸ்போர்ட் வாகனங்களை (Non-transport Vehicles) ஷோரூம்களில் பதிவு செய்யும் திட்டம் திருவனந்தபுரம், டெல்லி, சென்னை, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








