ஃபாஸ்ட் டேக்கின் உதவியால் காணாமல்போன கார் 5 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு... எப்படி தெரியுமா..?
ஃபாஸ்ட் டேக்கின் உதவியால் காணாமல்போன காரை வெறும் ஐந்தே மணி நேரத்தில் புனே நகர போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுங்கச்சாவடிகளில் பணமில்லா கட்டணம் செலுத்தும் முறைக்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஃபாஸ்ட் டேக். இது, சிறிய ஸ்கேனிங் கோடிங் முறை மூலம் தானாகவே டோல் கட்டணத்தைச் செலுத்த உதவும். இதில், பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அலை தொழில்நுட்பம் இதற்கு உதவும்.
ஏற்கனவே, இரு முறை இத்திட்டத்தை கட்டாயமாக்குவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டநிலையில், தற்போது மீண்டும் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு டோல்கேட்டுகளில் அரங்கேறும் முறைகேடுகள் மற்றும் கட்டண கொள்ளைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த ஃபாஸ்டேக் திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. இது கடந்த 1ம் தேதி முதல் கட்டாயம் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் டிசம்பர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஆனால், பலர் ஃபாஸ்ட்டேக் திட்டத்திற்கு மாறாத காரணத்தால் இந்த கால அவகாசத்திலும் மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருவாரியானோர் இந்த ஃபாஸ்டேக்கைப் பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் அறிந்துக் கொள்ளாமலே இருக்கின்றனர்.
இந்நிலையில், காணாமல் போன புத்தம் புதிய ஸ்கார்பியோ காரை ஃபாஸ்டேக்கின் உதவியால் புனே நகர போலீஸார் வெறும் 5 மணி நேரங்களில் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனேவில் உள்ள கர்வேநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஜக்டப். அதே பகுதியில் வீடு கட்டுமான அலுவலகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர், நடப்பாண்டின் ஆகஸ்டு மாதத்தில் புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தார்.
தொடர்ந்து, அந்த காரில் மத்திய அரசின் அறிவிப்பின்படி, டோல்கேட்டில் விரைவாக பணம் செலுத்துவதற்காக ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரையும் ஒட்டினார்.

இந்நிலையில், கடந்த திங்கள் (23 டிசம்பர்) விடியற்காலை 4.38 மணியளவில் ஜக்டாபின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், அவரது ஸ்கார்பியோ கார் தலேகன் டோல்பிளாசாவைக் கடந்திருப்பதாகவும். அதற்காக சுங்கக் கட்டணம் ரூ. 35 ஃபாஸ்ட் டேக் மூலம் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குறுஞ்செய்தி விளக்கியிருந்தது.

தொடர்ந்து, மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அன்றைய தினத்தின் காலை 5.50 மணியளவிலேயே ஃபாஸ்ட்டேக்கில் இருந்து அவருக்கு வந்துள்ளது. அப்போது அவர் விழித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், குறுஞ்செய்திகளைக் கண்டு குழப்பமடைந்த அவர், நாம் தான் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளேமே, ஏன் இப்படி குறுஞ்செய்திகள் வருகின்றன என்ற கேள்வியுடன், வெளியேச் சென்று காரைப் பார்த்துள்ளார்.

ஆனால், அப்போது அவர் நிறுத்திய இடத்தில் கார் இல்லை. இதனால், கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜேந்திர ஜக்டப், சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். காரின் ஜிபிஎஸ் மற்றம் ஃபாஸ்ட்டேக் மூலம் கட்டணம் செலுத்திய டோல் விவரங்களைக் கொண்டு போலீஸார் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து, அந்த கார் கடைசியாக தானே பகுதியில் சென்றிருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, கார்குறித்த அனைத்து தகவலையும் மும்பரே பகுதி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கர்வேநகர் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, மும்பரே பகுதி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இவ்வாறு, கடைசியாக காணாமல் போன கார் ஹிரநந்தனி எஸ்டட்டிற்கு அருகில் உள்ள கோத்பந்தர் என்ற பகுதியில் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர். அப்போது, நேரம் 8 மணி என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த காரை களவாடிச் சென்ற திருடர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். ஆகையால், காரை மட்டும் மீட்டும் போலீஸார் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

காணாமல் போன காரை மீட்பதற்கு பெரும் உதவியினை ஃபாஸ்ட் டேக் வழங்கியுள்ளது. ஃபாஸ்ட் டேக் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பரவிய வண்ணம் இருந்தாலும், டோல் கேட்டில் கட்டண கொள்ளையைத் தடுக்கவும், சொந்த காரின் திருட்டைக் கண்டுபிடிக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, டோல்கேட்டுகளில் கட்டணத்தைச் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய அவலநிலையை இந்த ஃபாஸ்ட்டேக்குகள் நீக்கும்.


Click it and Unblock the Notifications