வாகன ஓட்டிகள் கொண்டாட்டம்... போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு இதுதான்... என்ன தெரியுமா?
போலீசாருக்கு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. முன்பு இருந்ததை விட தற்போது அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு முன்பு 1,000 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் குடி போதையில் வாகனங்களை இயக்கினால், புதிய சட்டத்தின்படி இனி 10,000 ரூபாயை நீங்கள் அபராதமாக செலுத்த வேண்டும்.

இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அன்று முதலே வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்ட தொடங்கி விட்டனர். தொடக்கத்தில் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் போலீசாரின் கெடுபிடி, அதிகப்படியான அபராத தொகைகள் உள்ளிட்ட காரணங்களால் இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒரு சில வாகன ஓட்டிகளுக்கு போலீசார் 20 ஆயிரம், 30 ஆயிரம் என அபராதம் விதித்துள்ளனர். இன்னும் சிலருக்கோ லட்சக்கணக்கில் கூட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் மற்ற வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும், அபராத தொகைகளை கடுமையாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கின. ஆரம்பத்தில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பின்னர் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் இந்த வரிசையில் இணைந்தது.

குஜராத் மாநில அரசு அபராத தொகைகளை அதிரடியாக குறைத்து விட்டது. இதுதவிர தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளும் அபராத தொகைகளை குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. இந்த சூழலில் வாகன ஓட்டிகளிடம் இனி மேல் கெடுபிடி காட்ட வேண்டாம் என போலீசாருக்கு தற்போது அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி இனிமேல் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மட்டுமே போலீசாரால் நிறுத்தப்படுவார்கள். அவர்களிடம் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படும். இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருக்கு தற்போது புதிதாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதில், ''இனிமேல் வெறுமனே ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகன ஓட்டிகளை நிறுத்த கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை மட்டுமே நிறுத்த வேண்டும். அவர்களிடம் மட்டுமே ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும்'' என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது ஹெல்மெட் அணியாமல் செல்வது, சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி செல்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வரை, வாகன ஓட்டிகளை போலீசார் நிறுத்த கூடாது. இதுபோன்ற விதிமுறைகளை மீறுபவர்களை மட்டும் நிறுத்தி பேப்பர்களை பரிசோதிக்கலாம். மற்ற வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் நிறுத்தி பேப்பர்களை கேட்க கூடாது.

இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு பேப்பர்களை கேட்டும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். எனவே போக்குவரத்து விதிகளை மீறாத வரை, வாகன ஓட்டிகளை நிறுத்த வேண்டாம் என ஹரியானா போலீசாருக்கு அம்மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார். தற்போது அதே பாணியை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. எப்படியோ இந்த உத்தரவு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தை பொறுத்தவரை புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது போலீசார் இன்னும் பெரிய அளவில் விதிக்கவில்லை.

ஒரு சில மாநிலங்களில் வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதங்கள் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து அவ்வாறான செய்திகள் எதுவும் வரவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி அபராதங்களை குறைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். எனவே தமிழக வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








