புதிய வரலாறு படைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... மக்கள் அமோக வரவேற்பு... என்னவென்று தெரியுமா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு புதிய வரலாறு படைக்கின்ற வகையிலான அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்ற சிறப்பு தகவலை விரிவான இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைப்பதுடன், நாட்டின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மத்திய அரசு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளன. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் தமிழக அரசு முதலில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் முதல் முறையாக தற்போது எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விழா சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. இதில், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு எலெக்ட்ரிக் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் பஸ்களில் ஏசி வசதி இடம்பெற்றுள்ளது. இந்த பஸ்களில் 32 பேர் அமர்ந்து பயணிக்க முடியும். இதில், ஏர் சஸ்பென்ஸன் வசதிகள், ஜிபிஎஸ் வசதிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தானியங்கி கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் பஸ்ஸில் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து சிறிது தூரம் பயணம் செய்தனர்.

தற்போதைய நிலையில் தமிழக அரசு சோதனை அடிப்படையில் 2 மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதில், ஒரு எலெக்ட்ரிக் பஸ் சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. ஆனால் மற்றொரு எலெக்ட்ரிக் பஸ்ஸின் சேவை தொடங்கப்பட இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் சோதனை அடிப்படையில் மூன்று முதல் நான்கு மாத காலத்திற்கு இயக்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கூறியபடி இந்த பஸ்களில் 32 பேர் அமர்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அதே சமயம் 25 பேர் வரை நின்று கொண்டு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பஸ்களில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணமாக 11 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 25 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பஸ்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பஸ்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தியை இங்கே தெரிவித்து கொள்கிறோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு மத்திய அரசு 525 எலெக்ட்ரிக் பஸ்களை ஒதுக்கியுள்ளது.

மேற்கண்ட நகரங்களில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான அனுமதியை மத்திய அரசு சமீபத்தில்தான் தமிழக அரசுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார பேருந்துகளை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயலும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








