டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!
புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக அல்ட்ராஸ் என்ற புதிய காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 45எக்ஸ் கான்செப்ட் காரின் அடிப்படையில் உருவாக்கப்ப்டடு இருப்பதால், அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், அல்ட்ராஸ் காரின் அறிமுகம் ஒத்திபோடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, டாடா அல்ட்ராஸ் காரை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகளுடன் கொண்டு வரும் விதத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போது பிஎஸ்-6 எஞ்சின்களுடன் அல்ட்ராஸ் கார் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி துவங்குவதற்கும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவை ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரில் 85 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 102 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுள் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 341 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இடம்பெறும்.

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வரும் என்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வராது என்ற புதிய தகவல் டாடா பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








