இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது
இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா அல்ட்ராஸ் கார் குறித்து அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பு அல்ட்ராஸ். இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது.

டாடா அல்ட்ராஸ் கார் தற்போது இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. டாடா அல்ட்ராஸ் கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது சமீப காலமாக பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. பெரும் ஆவலை தூண்டியுள்ள அல்ட்ராஸ் கார் சமீபத்தில் நிறைவடைந்த தீபாவளி பண்டிகை சமயத்தில் டாடா ஷோரூம்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. அதற்கும் முன்னதாக 2019ம் ஆண்டின் கோடை காலத்தில் டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதற்கு பிறகு 2019ம் ஆண்டின் பண்டிகை காலத்தில் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என யூகங்கள் கிளம்பின. ஆனால் அவை எதுவுமே நடக்கவில்லை.

இவ்வாறான குழப்பங்களுக்கு மத்தியில், டாடா அல்ட்ராஸ் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் கார் குறித்த புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது 2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா நிறுவனம் ஆரம்பத்தில் பிஎஸ்-4 இன்ஜின்களுடன் மட்டுமே அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின்களுடன் அல்ட்ராஸை களமிறக்க டாடா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் முதல் நாள் முதலே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையான இன்ஜின்களுடன் டாடா அல்ட்ராஸ் கார் கிடைக்கும். இது தொடர்பான திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் கார் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 1.2 லிட்டர் 85 எச்பி 3-சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் 102 எச்பி 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 90 எச்பி 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் டாடா அல்ட்ராஸ் கார் களமிறக்கப்படலாம்.

தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிடவுள்ளது. இதில், டொயோட்டா கிளான்சா மற்றும் மாருதி சுஸுகி பலேனோ உள்ளிட்ட கார்கள் அடக்கம். வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை அதிகரித்துள்ள டாடா அல்ட்ராஸ் காரின் புதிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டாடா அல்ட்ராஸ் கார் 5 முதல் 8 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த விலைக்குள் களமிறக்கும் பட்சத்தில், டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா அல்ட்ராஸ் கார் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications