கூர்மையான முன்புறத்துடன் டாடா அல்ட்ராஸ் இறுதி சோதனை ஓட்டம்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் தகவல்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை எனினும் சில தகவல்கள் நமது தளத்திற்கு தெரியவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த வருடம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த டாடா அல்ட்ராஸ் கார் அடுத்த மாதத்தில் அறிமுகத்தை எதிர்கொள்ளவுள்ளதால் இந்த சோதனை ஓட்டம் தான் அதன் இறுதி சோதனை ஓட்டமாக இருக்கும் என தெரிகிறது.

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட போது கொண்டிருந்த தோற்றத்தை தான் தற்போதைய சோதனை ஓட்டத்திலும் இந்த கார் பெற்றுள்ளது. சுறாவின் மூக்கை போன்ற கூர்மையான முன்புற பகுதி, சிறிய தேன்கூடு வடிவில் க்ரில்லின் முன்புறம் மற்றும் நேர்த்தியான ஹெட்லைட்ஸ் அமைப்பு போன்றவற்றை முன்புறத்தில் இந்த அல்ட்ராஸ் கார் கொண்டுள்ளது.

இதன் முன்புற பம்பரின் மேற்புறத்தில் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பம்பரின் மத்தியில் கருமையான நிறத்தில் காற்று உள்வாங்கி உள்ளது. டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 என்கிற டிசைன் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் கதவுகளை 90 டிகிரி வரை திறக்கலாம்.

இந்த சோதனை புகைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே ப்ரீமியம் தோற்றத்தில் க்ரே மற்றும் கருப்பு நிறங்களில் டிசைன் வேலைப்பாடுகள் நிறைந்த இந்த காரின் உட்புற பாகங்கள் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி பார்த்தால், அல்ட்ராஸ் காரில் உட்புறத்தில் நான்கு திசைகளிலும் விளக்குகள், இன்போடெயின்மெண்ட் திரை மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதுமட்டுமல்லாமல் விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை தரும் டிஜிட்டல் திரை, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களாக ட்யூல் காற்றுப்பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், கேமிராவுடன் கூடிய பின்பக்க பார்கிங் சென்சார், அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் அமைப்பு மற்றும் சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி உள்ளிட்டவை உள்ளன.

டாடா அல்ட்ராஸ் மாடல், பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான மூன்று என்ஜின் தேர்வுகளுடன் வெளியாகவுள்ளது. இந்த தேர்வுகளில் டாடா டியாகோவில் கொடுக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், நெக்ஸான் மாடலில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் அடங்கும். டீசல் வேரியண்ட்டிற்கு 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட உள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனுடையது. இந்த என்ஜினுடன் ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 98 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடனும் டீசல் என்ஜினுடனும் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் மாடலை போன்று அல்ட்ராஸ் மாடலிலும் எலக்ட்ரிக் வேரியண்ட்டை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்டால் இதிலும் நெக்ஸானில் பயன்படுத்தப்பட்ட ஸிப்ட்ரான் தொழிற்நுட்பம் தான் உபயோகிப்பட உள்ளது. அடுத்த மாதம் 16ஆம் தேதி இந்த அல்ட்ராஸ் காருடன் அறிமுகமாகவுள்ள நெக்ஸான் காரின் இறுதி சோதனை ஓட்டமும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

அல்ட்ராஸின் இந்த கடைசி சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் சில முக்கிய தகவல்கள் தெரியவில்லை என்றாலும் டாடா நிறுவனத்தின் சிறந்த காராக பல முன்னணி நிறுவனங்களின் கார்களுடன் விற்பனையில் இந்த கார் மல்லுக்கட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








