அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..!
மாருதி பலேனோவுக்கு (க்ளான்ஸா) போட்டியாக களமிறங்கும் வகையில் உருவாகியுள்ள டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் மீண்டும் ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இந்த கார் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா நிறுவனம் அதன் புதிய மாடல் எஸ்யூவி ரகத்திலான ஹாரியர் காரை அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் பட்ஜெட் ரகத்தில் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருந்ததால், எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், டாடா நிறுவனம் மீண்டும் ஓர் புதிய மாடல் காரை இந்த ஆண்டே இந்திய கார்கள் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், அந்த நிறுவனம் டாடா அல்ட்ராஸ் காரைதான் புதிதாக களமிறக்க இருக்கின்றது. இந்த ஹேட்ச்பேக் ரகத்திலான காரை சமீபத்தில் நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியில்தான் அந்த நிறுவனம் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் விதமாக பல்வேறு பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சமீப காலங்களாக அல்டராஸ் காரை டாடா நிறுவனம் இந்தியச் சாலைகளில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது. இதுகுறித்த புகைப்படங்களை நாம் வெளியிட்டிருக்கிறோம்.

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் மீண்டும் சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி, அதன் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ளது. ஆனால், இம்முறை எந்தவொரு ஒளிவும் மறைவுமின்றி அல்ட்ராஸ் கார் காட்சியளித்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை டீம்பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஸ்பை படங்கள், அல்ட்ராஸ் குறித்து எடுக்கப்படும் தொலைக்காட்சி விளம்பரத்தின்போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்த கார் வருகின்ற ஜீலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை டாடா தரப்பில் இருந்து வெளிவரவில்லை.

அல்ட்ராஸ் காருக்கு டாடா நிறுவனம் புதுவிதமான டிசைன் தாத்பரியங்களை வழங்கியுள்ளது. அந்தவகையில், ஸ்லீக் ரகத்திலான ஹெட்லேம்ப், இன்டெக்ரேடட் க்ரில் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பெரிய அளவிலான பனி விளக்கு, அந்த காரின் முகப்பு பகுதி பம்பரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதனால், இந்த 4 மீட்டர் நீளமுடைய கார் மாடர்ன் ரகத்திலான தோற்றத்தைப் பெற்று ரம்மியமாகக் காட்சியளிக்கின்றது. அதேசமயம் இந்த ஸ்பை புகைப்படங்கள் அல்ட்ராஸ் காரின் பின் புற பகுதியை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளது. ஆகையால், அந்த காரின் பின்புற கவர்ச்சியான அழகு குறித்த தகவல் துளியளவும் மறைவின்றி வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்தவகையில், காரின் பின்புறத்தில் உள்ள பூட் பகுதிக்கு மேல் பகுதியில் இருந்து, அது முடியும் பகுதி வரை கருப்பு நிறம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த பகுதியில்தான் காருக்கான ரியர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், டாடாவின் பேட்ஜ்களும் அங்குதான் உள்ளன. அதேசமயம், இந்த ரியர் டிசைனானது, பார்ப்பதற்கு டாடா ஹாரியரின் பின்பக்க டிசைனைப் போன்று காட்சியளிக்கின்றது.

டாடா நிறுவனத்தின் இந்த அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில்தான் கிடைக்கும் என கூறப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்தே பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அந்தவகையில், இந்த ஹேட்ச்பேக் ரக காரில் நெக்ஸான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின்தான், சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட உள்ளது.

அந்தவகையில், இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினை, 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் டாடா நிறுவனம் ட்யூன்அப் செய்ய இருக்கின்றது. அதேசமயம், இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கேற்பவும் உருவாகலாம். இந்த கார் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ (க்ளான்ஸா), ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார்களுடன் போட்டியைச் சந்திக்கும்.


Click it and Unblock the Notifications








