வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய டீலர்ஷிப் ஊழியர்கள்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
டாடா டீலர்ஷிப் பணியாளர்கள், வாடிக்கையாளர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் சூழலில், இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

நம்மை போன்ற நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் வசிக்கும் நாடு இந்தியா. இங்கு வாழும் பலருக்கும் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும். வசதி படைத்த மக்களுக்கு சொந்த கார் ஒரு பொருட்டே இல்லை என்றாலும், நடுத்தர வர்க்க மக்களுக்கு அது பெரும் கனவு.

நடுத்தர வர்க்க மக்கள் ஆண்டு கணக்கில் திட்டமிட்டு, மிக மிக கடுமையாக உழைத்து, சிறுக சிறுக பணம் சேகரித்துதான் சொந்த கார் வாங்குகின்றனர். இந்த வகையில் வீட்டிற்கு வரும் புதிய காரை, ஒரு குடும்ப உறுப்பினரை போன்றே வரவேற்கின்றனர்.

சொந்தமாக புதிய கார் வாங்கும்போது கிடைக்கும் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் மட்டும் வர்ணித்து விட முடியாது. ஆனால் தவம் கிடந்து பெற்ற இந்த மகிழ்ச்சியை, சில டீலர்ஷிப் பணியாளர்கள் நொடிப்பொழுதில் சீர்குலைத்து விடுகின்றனர்.

வாடிக்கையாளர்களை எப்படி கையாள்கிறோம்? என்பதில்தான் ஒரு கார் நிறுவனத்தின் வெற்றியே உள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய காரை விற்பனைக்கு கொண்டு வந்தாலும், வாடிக்கையாளர் சேவையில் கோட்டை விட்டு விட்டால், அந்த தயாரிப்பு நிச்சயம் தோல்வியைதான் தழுவும்.

அத்துடன் அந்த கார் நிறுவனமும் வளர்ச்சியடைய முடியாது. எனவே வாடிக்கையாளர் சேவை மிக முக்கியம் என கருதப்படும் சூழலில், நியாயமான கோரிக்கைக்காக டாடா ஷோரூமிற்கு வந்த கஸ்டமர் ஒருவரை, பணியாளர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் பகுதியில், மால்வா மோட்டார்ஸ் (Malwa Motors) என்ற டாடா டீலர்ஷிப் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் இந்த டீலர்ஷிப்பில், ரூ.11 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஆரஞ்ச் நிற டாடா காரை முன்பதிவு செய்தார்.

ஆனால் நீண்ட நாட்களாக கார் டெலிவரி செய்யப்படவில்லை. இதன்பின்பு டாடா நிறுவனம் இனி இந்த காரை ஆரஞ்ச் நிறத்தில் உற்பத்தி செய்யாது (என்ன கார் என்ற தகவல் வெளியாகவில்லை) என டீலர்ஷிப்பில் இருந்து வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் நீங்கள் வேறு வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் ஷோரூம் பணியாளர்கள் கூறினர். இதனால் அந்த வாடிக்கையாளர் சில்வர் நிற காரை தேர்வு செய்தார். இதன்பின் சில நாட்களில் கார் டெலிவரி செய்யப்பட்டது.

முன்னதாக காருக்கு சில கூடுதல் ஆக்ஸஸரிஸ்களை (Accessories) பொருத்த வேண்டும் என்று அந்த வாடிக்கையாளர் கூறியிருந்தார். ஆக்ஸஸரிஸ்களுக்கு என தனியாக 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி அவர் முன்பதிவும் செய்து கொண்டார்.

காரை டெலிவரி எடுக்கும் சமயத்தில் அனைத்து ஆக்ஸஸரிஸ்களும் ஒன்று விடாமல் பொருத்தி தரப்படும் என ஷோரூம் பணியாளர்கள் உறுதி அளித்திருந்தனர். இருந்தபோதும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை.

ஆக்ஸஸரிஸ்கள் பொருத்தாமலேயே அவர்கள் காரை டெலிவரி செய்தனர். இதனை அந்த வாடிக்கையாளர் தட்டி கேட்டார். அப்போது, அடுத்த நாள் உங்கள் வீட்டிற்கே வந்து ஆக்ஸஸரிஸ்களை நிச்சயமாக பொருத்தி தந்து விடுகிறோம் என ஷோரூம் பணியாளர்கள் மீண்டும் உறுதி அளித்தனர்.

ஒருநாள்தான் என்பதால், அந்த வாடிக்கையாளரும் நம்பி காரை டெலிவரி எடுத்து கொண்டார். ஆனால் மூன்று நாட்கள் ஆகியும், யாரும் வரவில்லை. இதனால் மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப்பிற்கு அந்த வாடிக்கையாளர் தொடர்ச்சியாக போன் செய்து கொண்டே இருந்தார்.

இதன்பின்பு ஒருவழியாக ஆக்ஸஸரிஸ்கள் பொருத்த கூடிய பணியாளர் ஒருவரை, அந்த வாடிக்கையாளரின் வீட்டிற்கு மால்வா மோட்டார்ஸ் நிறுவனம் அனுப்பி வைத்தது. ஆனால் அப்போதும் அந்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

நிறைய ஆக்ஸஸரிஸ்களுக்கு அந்த வாடிக்கையாளர் பணம் கட்டியிருந்தார். ஆனால் அவற்றில் பாதியை மட்டுமே மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப் பணியாளர் கொண்டு வந்திருந்தார். சீட் கவர் போன்ற முக்கியமான ஆக்ஸஸரிஸ்கள் பலவும் விடுபட்டு போயிருந்தன.

இதனால் அந்த வாடிக்கையாளர் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார். இதன்பின்பு மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப் பணியாளர்களிடம், இது தொடர்பாக கேமரா முன்பு கேள்வி எழுப்ப வேண்டும் என அவர் முடிவு செய்து கொண்டார்.

அத்துடன் இதனை யூ-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் முடிவு செய்தார். இதன்படி சமீபத்தில் அந்த வாடிக்கையாளர் மால்வா மோட்டார்ஸ் ஷோரூமிற்கு சென்றார். அவர் உள்ளே நுழைந்ததும், ஷோரூம் பணியாளர்கள் அவரை சரமாரியாக திட்டினர்.

இந்த சம்பவங்களை எல்லாம் செல்போன் கேமரா மூலம் அவர் யூ-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்பினார். இதனால் கோபம் அடைந்த ஷோரூம் பணியாளர் ஒருவர், ''உனது செல்போனை உடைத்து விடுவேன். வெளியே போ'' என கத்தினார்.

என்றாலும் அந்த வாடிக்கையாளர் மிகவும் பொறுமையாக கேள்விகளை மட்டும் கேட்டு கொண்டிருந்தார். ஆனால் அவரின் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காத ஷோரூம் பணியாளர்கள், பொறுமையை இழந்து அவரை திட்டி கொண்டிருந்தனர்.

அத்துடன் ''செல்போனை உள்ளே வை'' என மீண்டும் மீண்டும் அவரை மிரட்டினர். அப்போது திடீரென வீடியோ ஸ்டாப் ஆகி விட்டது. வீடியோ ஸ்டாப் ஆன பிறகு என்ன நடந்தது? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

வீடியோவில் பேசிய வாடிக்கையாளர், தான் வாங்கியது என்ன கார்? தனது பெயர் என்ன? என்பது போன்ற தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் ஷோரூமில் நடந்த சம்பவங்களை எல்லாம் தனது சேனல் மூலமாக யூ-டியூப்பில் அவர் நேரலை செய்தார்.

இந்த வீடியோவின் தொடக்கத்தில் நான் ஏன் இந்த வீடியோவை எடுக்கிறேன் என்பதை அவர் விளக்கினார். அத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அவர் கூறினார். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
காடிவாடி தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மால்வா மோட்டார்ஸ் டீலர்ஷிப் மீது டாடா நிறுவனம் கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அவர்களில் பெரும்பாலானோரின் கோரிக்கை.

இதுதவிர இந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். டாடா நிறுவனம் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கது. ஆனால் அதன் டீலர்ஷிப்கள் மீது இதுபோல் பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.

எனவே தவறு செய்யும் டீலர்ஷிப்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கையை எடுக்க தவறினால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையை இழக்க வேண்டியதிருக்கும் என்பதைடாடா நிறுவனம் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது.


Click it and Unblock the Notifications








