டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்!
டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் காருக்கான புதிய தொழில்நுட்பம் குறித்த விபரத்தை டாடா மோட்டார்ஸ் நேற்று வெளியிட்டது. தமது எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் மின் மோட்டார், டிரான்ஸ்மிஷன் மற்றும் இயக்கத்திற்கு துணைபுரியும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை ஸிப்ட்ரான் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பில், பர்மனென்ட் மேக்னெட் ஏசி மோட்டார், டிரான்ஸ்மிஷன், பேட்டரி மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. அத்துடன் டாடா ஸிப்ட்ரான் தொகுப்பில் இருக்கும் மின் மோட்டார் மிக மிக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தொகுப்பில் இடம்பெறும் பேட்டரியானது தூசி மற்றும் தண்ணீர் புகாத அளவுக்கு சிறப்பான தடுப்பு அமைப்பை பெற்றிருக்கும். அதாவது, IP67 என்ற உயர்வகை பாதுகாப்பு கவச அமைப்பை இந்த பேட்டரி பெற்றிருக்கும்.

அதேபோன்று, இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பில் ஸ்மார்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. பிரேக் பிடிக்கும்போது ஏற்படும் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும். இதன்மூலமாக, கூடுதல் பயண தூரத்திற்கான உறுதியை பெற முடியும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கிறது. டாடா நெக்ஸான், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்களில் இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மின்சார கார் சந்தையை இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் புதிய அத்யாயத்தை எழுதும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. அதிக பயண தூரத்தையும், வாடிக்கையாளர்களை சிலிர்க்க வைக்கும் செயல்திறனையும் இந்த ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் வழங்கும் என்கிறது டாடா மோட்டார்ஸ்.

இதற்காக வழங்கப்படும் விசேஷ சாஃப்ட்வேர் மூலமாக காரின் இயக்கம் குறித்த தகவல்கள், பழுது எச்சரிக்கை உள்ளிட்ட தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பெறுவதற்கான விசேஷ செயலியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த ஸிப்ட்ரான் தொகுப்பில் இடம்பெறும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும். பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் சார்ஜ் ஏற்ற முடியும். தவிரவும், சாதாரண வீட்டு பிளக் பாயிண்ட்டுகளிலிருந்து சார்ஜ் ஏற்றும் வசதியையும் அளிக்கும்.

டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பு பயன்படுத்தப்படும் முதல் கார் மாடல் நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டு காலம், அதாவது 2020 ஜனவரி முதல் மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இதனை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








