சபாஷ்... டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்!
ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு, டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு 'பல்க்' ஆர்டர் கிடைத்துள்ளது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் முக்கிய நகரங்களில் வாகனப் புகையால் காற்று மாசுபடுவதை தவிர்ப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பொது போக்குவரத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன.

அந்த வகையில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் பொது போக்குவரத்தில் மின்சார பேருந்துகளை கணிசமாக இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 300 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் ஃபேம் - 1 மானியத் திட்டத்தின் கீழ் 200 பேருந்துகள் ஆமதாபாத் மாநகர போக்குவரத்து கழகத்தின் ஜன்மார்க் என்ற விசேஷ வாகனங்களை இயக்குவதற்கான பிரிவுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மொத்தமாக 300 மின்சார பேருந்துகள் ஆமதாபாத் ஜன்மார்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கின்றன.

இந்த பேருந்துகளுக்கான மின்கலத்தை மின்னேற்றம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு மையங்களை டாடா மோட்டார்ஸ் அமைத்துக் கொடுக்க இருக்கிறது. இதற்காக, அதிவிரைவாக இந்த பேருந்துகளின் மின்கலத்தை மின்னேற்றம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள், பேருந்து செல்ல இறுதி செய்யப்பட்டுள்ள வழித்தடங்களிலும், பணிமனைகளிலும் அமைக்கப்பட இருக்கிறது.

டாடா மின்சார பஸ்கள் சிறப்பான செயல்திறனும், போதுமான பயணிக்கும் தூரத்தையும் வழங்கும் என்று தெரிகிறது. அதேபோன்று, பயணிகளுக்கான வசதிகளிலும் நவீன யுக சிறப்பம்சங்களையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும்.

இந்த மின்சார பேருந்துகளுக்கான மின்சார சாதனங்கள், மின் மோட்டார், பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்கள், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா மின்சார பேருந்துகள் ஹிமாச்சலப் பிரதேசம், சண்டிகர், அஸ்ஸாம் மற்றும் மஹாராஷ்டிரா என பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளில் வைத்து சாலை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








