அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்!
எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்த தயாராகி வருகிறது டாடா மோட்டார்ஸ். இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் அடுத்து ஒரு புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு அடுத்து விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் ஹாரியர் எஸ்யூவியை மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ். மேலும், டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலையும் இந்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில், மற்றொரு புதிய எஸ்யூவி மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் இடையிலான மாடலாக இது நிலைநிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த புதிய எஸ்யூவி மாடல் பிளாக்பேர்டு என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வகையில் இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு கொள்கையில் இந்த புதிய எஸ்யூவி தயாரிக்கப்படுகிறது. மேலும், ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியைவிட சற்று கூடுதல் இடவசதி மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹாரியர் எஸ்யூவியைவிட விலை குறைவானதாக இந்த புதிய மாடல் வர இருக்கிறது. இது நிச்சயம் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய எஸ்யூவி மாடல் வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினும், 1.5 லிட்டர் டீசல்் எஞ்சின் ஆப்ஷனிலும் வரும் என்பது கணிப்பு. பெட்ரோல் எஞ்சின் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுப்பதற்கான திட்டமும் டாடா மோட்டார்ஸிடம் உள்ளது. ஆனால், இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெறாது என்று தெரிகிறது.

அல்ட்ராஸ் என்ற பெயரில் வர இருக்கும் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் புதிய செடான் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இந்த செடான் கார் திட்டத்தை கைவிட்டு இப்போது புதிய எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








