ஜெனிவா மோட்டார் ஷோவை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு
ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்பதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நம் நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கடந்த 1998ம் ஆண்டு முதல் ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்று வருகிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் மிக நீண்ட காலமாக இந்திய தயாரிப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் விதத்தில், இந்த கண்காட்சியை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே பல புதிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைப்பதும் வழக்கமான நடைமுறை. ஜெனிவா மோட்டார் ஷோவிற்கு டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனி கவனமும், முன்னுரிமையும் அளித்து வந்தார்.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார் மாடல் என்ற பெருமைக்குரிய டாடா இண்டிகா ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன், ஆரியா கூபே, மரினா எஸ்டேட், ஹெக்ஸா, டாமோ ரேஸ்மோ எலெக்ட்ரிக் கார், இ-விஷன் செடான் கார், அல்ட்ராஸ் மற்றும் பஸ்ஸார்டு (க்ராவிட்டாஸ்) உள்ளிட்ட ஏராளமான புதிய கார் மாடல்கள் ஜெனிவா மோட்டார் ஷோவில்தான் முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த சூழலில், வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் 2020 ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்பதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விற்பனை சுமாராக இருக்கும் இந்த தருணத்தில், விற்பனையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், வரும் பிப்ரவரி மாதம் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி மற்றும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகம் செய்ய உள்ளது டாடா மோட்டார்ஸ்.

எனவே, ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்துவதற்கு புதிய மாடல்கள் கைவசம் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, இந்த 2020ம் ஆண்டுக்கான ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்பதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாம்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மோட்டார் வாகனக் கண்காட்சி உலக அளவில் பிரபலமானது. இந்த மாபெரும் கண்காட்சியில் உலகின் பெரும்பாலான கார் நிறுவனங்கள் பங்கேற்பதுடன், பல புதிய மாடல்களையும் காட்சிக்கு வைப்பதற்கு முனைப்பு காட்டி வருகின்றன.

தனது தயாரிப்புகளை சர்வதேச அளவில் கவனம் பெறுவதற்கான தளமாக டாடா மோட்டார்ஸ் இந்த கண்காட்சியை பார்த்து வந்தது. ஆனால், 2020ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இதுவரை டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை.
Source: AutoCarIndia


Click it and Unblock the Notifications








