ரத்தன் டாடாவின் உயரிய கனவு சிதைந்தது... 'மக்களின் கார்' நானோவிற்கு ஏற்பட்ட சோகம் இதுதான்...
இந்திய மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது கொடுத்ததுதான் என அதிர வைத்த ரத்தன் டாடாவின் நானோ கனவு சிதைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த டாடா குழுமம் பல்வேறு தொழில்களில் வெற்றி கொடி நாட்டி கொண்டுள்ளது. இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிக சிறப்பான கட்டுமான தரத்துடன் விற்பனைக்கு வருகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் அவை மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ளன.

குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் டாடா நிறுவனத்தின் நெக்ஸான்தான். டாடா நெக்ஸான் கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தபோது போட்டி நிறுவனங்கள் கூட மனதார பாராட்டின.

டாடா நிறுவன கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. விபத்து நேரும் சமயங்களில், காரில் பயணம் செய்பவர்களின் உயிரை அவை காப்பாற்றுகின்றன. பயணிகளின் உயிரை டாடா கார்கள் காப்பாற்றிய செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் நானோ கார் விஷயத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் சற்றே தடுமாறி விட்டது.

டாடா நானோ பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை. டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் நானோ. ஒவ்வொரு இந்தியரும் சொந்த காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், 1 லட்ச ரூபாய்க்கு கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ரத்தன் டாடா அறிவித்தபோது, சிலர் எள்ளி நகையாடினர்.

இந்திய மக்கள் மத்தியிலோ பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. பல்வேறு தடைகளையும் கடந்து, கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் நானோ காரை டாடா நிறுவனம் வெளியிட்டது. இதன்பின் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் டாடா நானோ கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸிக் மாடலின் விலை 1 லட்ச ரூபாய்க்கும் நெருக்கமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதன் மூலம் உலகின் மிக மலிவான விலை கார் என்ற பெருமையை டாடா நானோ பெற்றது. இது வேண்டாத வேலை என பலர் கூறினாலும், மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது கொடுத்ததுதான் என அதிர வைத்தார் ரத்தன் டாடா. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் டாடா நானோ காரின் விற்பனை ஓரளவிற்கு நன்றாகதான் இருந்தது.

ஆனால் நாட்கள் ஆக ஆக டாடா நானோ காரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இவ்வளவு மலிவான விலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் திணறியது. அதன் பின் விற்பனை குறைந்ததால், நானோ காரின் உற்பத்தி செலவு டாடா மோட்டார்ஸின் கையை கடித்தது.

இருந்தபோதும் ரத்தன் டாடாவின் கனவு திட்டம் என்பதால், நானோ காரின் உற்பத்தியை நிறுத்துவதா? வேண்டாமா? என டாடா மோட்டார்ஸ் குழப்பத்தில் ஆழ்ந்தது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நானோ காரின் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது. ஆனால் அப்போது நானோவின் உற்பத்தியை நிறுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை.

ஒரு சமயத்தில் 'மக்களின் கார்' என தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நானோவின் எதிர்காலம் இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு ஆளானது. இந்த சூழலில் கடந்த 6 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே ஒரு நானோ காரை மட்டுமே விற்பனை செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நானோ காரை தயாரித்துள்ளது. அப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அருகே உள்ள சனந்த் பிளாண்ட்டில் 82 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன்பின் நானோ உற்பத்தி செய்யப்படவில்லை. நானோ காரை விற்பனையில் இருந்து விலக்குவது என்ற அதிகாரப்பூர்வமாக முடிவை டாடா தற்போது இறுதியாக எடுத்து விட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் அப்படியான ஒரு முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றே டாடா நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்க்கெட்டில் தேவையை பொறுத்து நானோ காரை தொடர்ந்து விற்பனை செய்யும் முடிவில்தான் டாடா மோட்டார்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இனி யாரும் நானோ காரை வாங்குவார்களா? என்பது சந்தேகமே.

இந்த சூழலில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நானோ காரின் உற்பத்தியை டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிறுத்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல்தான் மிகவும் கடுமையான பிஎஸ்-6 (BS-VI) மாசு உமிழ்வு விதிமுறைகள் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ளன.

ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகள் மற்றும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப நானோ காரை மேம்படுத்தும் திட்டம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. 1 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக அறிமுகம் செய்யப்பட்டாலும் தற்போதைய நிலையில் டாடா நானோ காரின் விலை 2.97 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், இந்தியா) என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








